கர்நாடக அணைகளில் மழை எதிரொலியால், காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து, வினாடிக்கு 8000 கன அடியில் இருந்து 19,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 2.50 லட்சம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 2.30 இலட்சம் கன அடி வரை நீர்வரத்து உயர்ந்தது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்து சுமார் 15 நாட்களாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல் பகுதியில் பாறைகள் அருவி தெரியாத வகையில் இருகரைகளையும் தொட்டவாரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாடார் கொட்டாய் போன்ற பகுதிகளில் வீடுகளையும், தங்கும் விடுதிகளையும் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் ஓசூர்-ஒகேனக்கல் பிரதான சாலை தண்ணீரில் மூழ்கி, போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.


தொடர்ந்து  காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படுகின்ற நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் கடந்த வாரம் வினாடிக்கு 8000 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக, காவிரி ஆற்றில் நீர்வரத்தை கடுமையாக குறைந்து, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு  வினாடிக்கு 8000 கன அடியாக இருந்து வந்தது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 25 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டும் குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டது.



இந்த நிலையில் கர்நாடகா அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்திருப்பதால் மீண்டும் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து நீர்திறப்பு நேற்று அதிகரிக்கப்பட்டது. இதில் கபினியிலிருந்து வினாடிக்கு 5000 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 12,403 கன அடி என மொத்த 17,403 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து கடுமையாக சரிந்து வந்த நிலையில், இன்று காலை மீண்டும் அதிகரித்துள்ளது.


இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8000 கன அடிலிருந்து 19000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை இயற்றியுள்ளதால் தண்ணீர் ஒகேனக்கல் பகுதியிலேயே தேங்கி நிற்கிறது. மேலும் தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27 வது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் சின்னாறு, கோத்திகள், மெயின் அருவி, மணல்மேடு வரை பரிசல் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீர்திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நிர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.