கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள்  நுழைவது வழக்கம். வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் மனித வனவிலங்குகள் மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதிகளை ஒட்டிய கிராமப்பகுதிகளுக்குள் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.


கோவை மாவட்டம் தடாகம் அடுத்த பன்னிமடை பகுதியில் தெப்பனூர் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த வசந்த் என்பவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். மேலும் இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இந்நிலையில் நேற்று பணிகள் முடிந்த நிலையில், வசந்த் தன்னுடைய வீட்டில் இருந்துள்ளார். இரவு 9 மணி அளவில் ஊருக்குள் யானைகள் புகுந்ததாக தகவல் வந்ததை அடுத்து வசந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் கதவுகளை தாழிட்டுக் கொண்டு உள்ளே டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகே வந்த மூன்று யானைகளில் ஒரு யானை 10அடி அகலம் உள்ள வீட்டின் ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தது.




இதனை அடுத்து வசந்த் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் அருகில் உள்ள படுக்கை அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் வீட்டுக்குள் இருந்த யானை அங்கேயே உணவுப் பொருட்களை தேடியபடி நின்றது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் சத்தம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானையை வீட்டிற்குள் இருந்து வெளியே விரட்டினர். பின்னர் மூன்று யானைகளையும் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேற்றி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.


இது குறித்து வசந்த் கூறுகையில் வரப்பாளையம் வனப்பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வந்த நிலையில், தற்போது வீட்டிற்குள்ளேயும் நுழைந்துள்ளது. அனைவரும் உடனடியாக படுக்கை அறைக்குள் சென்றதால் உயிர்த் தப்பினோம். யானைகள் ஊருக்குள் வரும் முன்னரே அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து வருவதால் அதனை கட்டுப்படுத்த வனத்துறையினருக்கு நாள்தோறும் கோரிக்கை வைத்து வருகிறோம் எனினும் யானைகள் ஊருக்குள் நுழைவது தொடர்கதையாக இருந்து வருகிறது எனத் தெரிவித்தார்.