கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தான். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, மலப்புரத்தில் சுகாதாரத் துறை கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது, அங்கு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் முகமூடி அணிய அறிவுறுத்தப்பட்டனர். சிறுவன் வசித்த கிராமமான பாண்டிக்காடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் லாக்டவுன்கள் நடைமுறையில் உள்ளன.


இதற்கிடையில், மேலும் 4 பேருக்கு நிபா அறிகுறி இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் உயிர் காக்கும் கருவிகள் ஆதரவில் சிகிச்சையில் இருக்கிறார் கூறினார். அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. சிறுவனின் தொடர்பு பட்டியலில் இருந்த சுமார் 240 பேர் கண்காணிப்பில் உள்ளனர். தொடர்ந்து, “கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், திருவனந்தபுரத்தில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலும் மாதிரிகளை பரிசோதிக்கும் வசதி இருந்தாலும், என்ஐவி-புனேயில் இருந்து ஒரு மொபைல் லேப் பரிசோதனைக்காக மலப்புரத்திற்கு கொண்டு வரப்படும். அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ள அனைவரின் மாதிரிகளும் பரிசோதிக்கப்படும். கேரளாவில் 2018 ஆம் ஆண்டு முதல் 5 நிபா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை, 2018-ல் கோழிக்கோடு ஒருவரும், 2019-ல் கொச்சியில் மற்றொருவரும், 2023-ல் கோழிக்கோடு நான்கு நோயாளிகளும் உயிர் பிழைத்துள்ளனர். 2018-ல் பாதிக்கப்பட்ட 18 பேரில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் 2021 இல், ஒரு மரணம் இருந்தது. 2023 ஆம் ஆண்டில், இரண்டு நிபா மரணங்கள் பதிவாகியுள்ளது என தெரிவித்திருந்தார்.




கண்காணிப்பு தீவிரம்


இதனிடையே சிறுவனுடன் தொடர்பில் இருந்த நபர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  இதனிடையே கேரளாவின் சில பகுதிகளில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ள நிலையில், தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தை ஒட்டி இருக்கும் தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதிகளில் சுகாதாரத் துறையினர் இன்று காலை முதல் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். 
குறிப்பாக வாளையார் சோதனை சாவடியில் முழு கவச உடை அணிந்த தமிழக சுகாதாரத் துறை ஊழியர்கள், பேருந்து மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கின்றனர். கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் வரும் 13 வழித்தடங்களிலும் சுகாதார துறையினர் இதேபோல சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுடன் வருபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலத்தில் தற்பொழுது ஐந்தாவது முறையாக நிபா வைரஸ் காய்ச்சலில் தாக்கம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.