கோவையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. இதில் கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து, சந்தனம் பூசி சடங்குகள் செய்தனர். சேலை, வளையல், தாலி கயிறு, குங்குமம், மஞ்சள் அடங்கிய சீர் வரிசை தட்டை ஆட்சியர் வழங்குகினார், இதனைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.


அப்போது பேசிய அவர், ”சமுதாய வளைகாப்பு விழாவில் 300 பெண்களுக்கு வீட்டில் நடத்தப்படுவதை போல நடத்தப்பட்டு சீர்வரிசை செய்து நடத்துகின்றனர். மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. மத்திய அரசும் பல திட்டங்களை கர்ப்பிணிகளுக்கு வழங்கி வருகிறது. 6,7 மாதமாக மத்திய அரசின் நிதி உதவி கர்ப்பிணிகளுக்கு கிடைக்கவில்லை. மாநில அரசு தரப்பில் தகவல்கள் கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் கிடைக்கவில்லை. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சரிடம் பேசி இருக்கிறோம். மாநில அரசு தகவல்களை தரவேற்றம் செய்வதில் இருப்பதால் காலதாமதம் ஏற்படுகின்றது என சொல்லி இருக்கின்றனர். மாநில சுகாதார துறை அமைச்சர் சீக்கிரம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டு இருக்கின்றோம். தமிழகத்தில் பிரசவிக்கும்போது மரணம் குறைவு.




நல்ல அலுவலக சூழல் இல்லதாத நிலையிலும், அங்கன்வாடி ஊழியர்கள் சிறப்பாக செய்கின்றனர். 33 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்கும்போது இன்னும் அதிகமான உரிமைகள் கிடைக்கும். தேசிய ஐனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எங்களது தலைவர்கள் பேசி வருகின்றனர். மோடி பிரதமராக வேண்டும் என்பதில் மற்ற கட்சிகளிடம் எந்த கருத்து வேறுபாடு இல்லை.  கூட்டணிக்குள் அதிகமான கட்சிகளை கொண்டு வருவது, புதிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆகியவை தேசிய தலைமை வழிகாட்டுதல்படி நடக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் தனி செயல்பாடு, தனி சித்தாந்தம் இருக்கிறது. அவர்கள் போற்றுகின்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவரான பரஸ்பரம் இருப்பதுதான் கூட்டணி.


இப்போதைக்கு தேசிய தலைமை எங்களுக்கு வழிகாட்டுதல் கொடுத்து இருக்கிறது. மாநில தலைமையும் தேசிய தலைமை முடிவு செய்யும் என்று சொல்லி இருக்கிறார். எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தலைமை வலியுறுத்தும். கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தேசிய தலைமையிடம் நேரடியாகவே சொல்லி வருகின்றனர். தேசிய தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும் வரை நாங்கள் இது தொடர்பாக எந்த தகவலும் சொல்ல விரும்பவில்லை. கூட்டணி விஷயங்களை தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றேன். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தேசிய தலைமை வழி நடத்துவார்கள்”  எனத் தெரிவித்தார்.