தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை ரயில், நீலகிரி மலை இரயில். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் வரை 46.61 கிலோ மீட்டர் தூரம் இந்த மலை இரயிலில் பயணிக்க முடியும். மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி இன்ஜின் மூலம் இரயில் இயக்கப்படுகிறது. குன்னூர் – உதகை இடையே டீசல் இன்ஜினில் இயக்கப்படுகிறது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை இரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளையும் நீலகிரி மலை இரயில் கவர்ந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை சூழலை இரசித்தபடி, உதகைக்கு நீலகிரி மலை இரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.




இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நீலகிரி மலை இரயில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மலை ரயில் பயணத்தை மீண்டும் தொடர்ந்துள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்த கட்டணமே தொடரும் எனவும், முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இதன்படி இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு கிளம்பிய மலை ரயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.




மலை ரயிலில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்படும் எனவும், பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி மலை இரயில் போக்குவரத்து மீண்டும் துவக்கப்படுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


வனத்துறை சுற்றுலா தலங்கள் திறப்பு


கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த சுற்றுலா தலங்களுக்கு பொது மக்கள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சி, பரளிக்காடு சூழல் சுற்றுலா உள்ளிட்டவை இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ள பல மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் பொது மக்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இதேபோல மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு அருகேயுள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் படகு சவாரி, ஆற்றில் குளியல், டிரெக்கிங் உள்ளிட்டவை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா ஊரடங்கினால் முடங்கி இருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் சென்று வருகின்றனர்.