திருப்பூர் - அவிநாசி சாலையில் பூண்டி ரிங்ரோட்டில் ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனை செந்தில்நாதன் என்பவர் நிர்வாகித்து வருகிறார். இந்த காப்பகத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் அன்னை அல்லது தந்தையை இழந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் அம்மாபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இங்கு தங்கியுள்ள சிறுவர்களுக்கு தினந்தோறும் உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இவர்களுக்கு ரசம் சாதம் இரவு உணவாக வழங்கப்பட்டுள்ளது. அதை சாப்பிட்ட 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. 




இதையடுத்து அங்கு பணியில் இருந்த வார்டன் சிறுவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இதனிடையே காப்பகத்தில் மருத்துவர்கள் குழந்தைகளை பரிசோதிக்கும் போது மாதேஷ், அத்திஸ் ஆகிய இரண்டு சிறுவர்கள் ஏற்கனவே உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. மேலும் கவலைக்கிடமாக இருந்த பாபு என்ற சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கெட்டுப்போன உணவை உட்கொண்டதால் சிறுவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




காப்பகத்தில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட 11 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சிறுவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் நேரில் பார்வையிட்டு சிகிச்சை விபரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”3 சிறுவர்கள் புட் பாய்சன் காரணமாக உயிரிழந்துள்ளனர். 11 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு ரசம் சாதம் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை சாப்பிட்ட 14 சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நேற்று இரவு சில குழந்தைகளை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 


முதல் கட்டமாக சிறுவர்கள் உண்ட உணவினை பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் சிறுநீர், மலம் ஆகியவற்றையும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவில் தான் சிறுவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பது குறித்து தெளிவான அறிக்கை கிடைக்கும். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காப்பக நிர்வாகியிடம் உரிய விசாரணை நடத்தப்படும். தற்பொழுது சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுக்கு நீர்ச்சத்து தொடர்பான மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண