கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலை பகுதியில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷின் மகன் முகேஷ் குமார் (23), கோவையில் உள்ள சேரன் கல்லூரியில் Pharm-D ஐந்தாம் ஆண்டு படித்து வந்தார். தெலுங்குபாளையம் பகுதியில் வாடகை வீடில் தங்கி கல்வி பயின்று வந்த அவர், தனது நண்பர்களுடன் ஆன்மீக நோக்கில் வெள்ளியங்கிரி மலை ஏறும் பயணத்தை நேற்று இரவு தொடங்கினார்.

மலையேற்றத்தில் திடீர் நெஞ்சு வலி

Continues below advertisement

சுமார் 10 மணியளவில் அபி, மகேந்திரன் உள்ளிட்ட எட்டு நண்பர்களுடன் மலையேற்றம் தொடங்கிய முகேஷ் குமார், இன்று அதிகாலை 2 மணியளவில் ஐந்தாவது மலைப்பகுதியை எட்டியபோது திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டார். சில நிமிடங்களில் அவர் மயங்கி கீழே விழுந்த நிலையில், அருகில் இருந்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடி மருத்துவ உதவி கிடைக்காத காரணத்தால், அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயில் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து, டோலி தூக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் மாணவரின் உடலை மலைப்பாதையில் இருந்து கீழிறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துயரச் சம்பவம் அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மலையேற்றப் பயணிகள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.