கோவை – கேரள எல்லைப் பகுதியில் உள்ள வாளையார் அணையில் குளிக்கச் சென்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த தேடுதல் பணிக்குப் பிறகு இன்று காலை அவரது உடல் நீர்மட்டத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது.

Continues below advertisement

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஜெரின் சஞ்சய் (21), கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கோவை – கேரள எல்லையில் அமைந்துள்ள வாளையார் அணைப் பகுதிக்குச் சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவர்கள் அணையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஜெரின் சஞ்சய் ஆழமான பகுதியில் சென்று சேற்றில் சிக்கிக் கொண்டார்.

அணையில் இறங்கிய மாணவர் திரும்பவில்லை

Continues below advertisement

அவருடன் இருந்த நண்பர்கள் உடனடியாக அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து சம்பவம் குறித்து கேரள மாநிலம் கஞ்சிகோடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் அணையில் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். முதல் நாளில் முழுவதும் தேடுதல் பணிகள் நடைபெற்றபோதும், அணையின் அடிப்பகுதியில் அதிகளவில் சேறு இருந்ததால் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை அணையின் நீர்மட்டத்தின் மேல் பகுதியில் மாணவரின் உடல் மிதந்தபடி காணப்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் உடலை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மாணவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அணை பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.