கோவை பெரியகடை வீதியில் ரூ.10 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகளுடன் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரு வியாபாரிகள் தலைமறைவான சம்பவம் நகை வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கோவை பெரியகடை வீதியில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் விற்பனை, கொள்முதல் செய்யும் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், குஜராத் மாநிலம் மெஹ்சானா பகுதியைச் சேர்ந்த குமார் சோனி மற்றும் விஜய் அம்பாலால் சோனி ஆகியோர், சமீபத்தில் அப்பகுதியில் தங்கம், வெள்ளிக் கட்டிகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கி வியாபாரம் செய்து வந்தனர்.

ஆரம்பத்தில் நகை வியாபாரிகளிடம் இருந்து தங்கம் மற்றும் நகைகளை வாங்கி, உரிய நேரத்தில் பணம் வழங்கியதால் அவர்கள் மீது வியாபாரிகள் நம்பிக்கை கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல வியாபாரிகள் தங்கம், வெள்ளிக் கட்டிகள் மற்றும் நகைகளை விற்பனைக்காக அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

Continues below advertisement

இந்த நிலையில், சுமார் 6 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் 5 கிலோ வெள்ளிக் கட்டிகள் உள்ளிட்ட ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்களுடன் குமார் சோனி மற்றும் விஜய் அம்பாலால் சோனி திடீரென தலைமறைவாகியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

தகவலறிந்த கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன், சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து பெரியகடை வீதி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தலைமறைவான இருவரும் டெல்லி, சூரத், தானே உள்ளிட்ட பல நகரங்களில் இதுபோன்ற மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தலைமறைவான இருவரையும் கைது செய்ய கோவை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.