இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக, திருவிழா நேரங்களில் பல்வேறு மாவட்டங்கள் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அந்தந்த மாவட்டங்களுக்கு பல்வேறு சிறிப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை- சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது, கோவையில் இருந்து வருகிற 11, 18-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் கோவை - சென்னை சிறப்பு ரயில் (வண்டி எண்: 06034) மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை செல்லும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஜனவரி 12, 19-ந் தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்படும் சென்னை-கோவை விரைவு ரயில் (எண்:06033) மறுநாள் காலை 9 மணிக்கு கோவை வந்தடையும்.இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக் கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல போத்தனூர் - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி போத்தனூரில் இருந்து 13, 20-ந் தேதிகளில் இரவு 12.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06024) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்றடையும். சென்னையில் இருந்து ஜனவரி 14, 21-ந் தேதிகளில் பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06023) இரவு 11.15 மணிக்கு போத்தனூர் வரும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக் கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை- போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (எண்: 06026) செங்கோட்டையில் இருந்து 14-ந்தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும். மறுநாள் இரவு 7.30 மணிக்கு போத்தனூர் வந்தடையும். இந்த ரயில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.