ராமநாதபுரம் மாவட்டம் கீழசீதை வீதியை சேர்ந்தவர் சவுந்திர பாண்டியன். 48 வயதான இவர், காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஜய்குமார் (19). கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி விடுதியில் அறையில் இருந்த அஜய்குமார் திடீரென வாந்தி மயக்கம் எடுத்து கீழே விழுந்துள்ளார். 


இதையடுத்து அங்கிருந்த சக மாணவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அஜய்குமார் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பிறகு அஜய்குமார் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மதுக்கரை காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


 



அஜய்குமார்


இதனிடையே அஜய்குமார் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதில் அவர் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திக் கொண்டதும், அதனால் ஏற்பட்ட உயர் இரத்த அழுத்ததால் இருதய செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இரண்டு ஆண்டுகளாக இதேபோல போதை ஊசி செலுத்தி கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மதுக்கரை காவல் துறையினர் தனிப்படை அமைத்து வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மதுக்கரை காவல் துறையினர் அஜய்குமார் தங்கியிருந்த விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, சக மாணவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அஜய்குமார் ஆன்லைன் மூலம் போதைக்காக மருந்து வாங்கி அதை நரம்பு மூலம் செலுத்திய போது மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. 


இதையத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறையினர் ஆன்லைன் மூலம் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்தவர் குறித்த தகவல்களை சேகரித்தனர். அதில் கும்பகோணத்தில் மருந்தகம் நடத்தி வரும் முகமது பசீர் (52) என்பவர் ஆன்லைன் மூலமாக மருத்துவரின் பரிந்துறையின்றி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆர்டர்களை பெற்று கொரியர் மூலமாக வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கும்பகோணம் சென்ற தனிப்படை காவல் துறையினர் முகமது பசீரை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். இதையடுத்து முகமது பசீரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண