கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாநகரில் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கடந்த 22ம் தேதியன்று இரவு எரிபொருள் பாட்டில் எரிந்த சம்பவத்தில், 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. 3 தனிப்படைகள் அமைத்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்  ஆய்வு, தொழில்நுட்ப அடிப்படையிலான விசாரணை, சாட்சி விசாரணை அடிப்படையி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.




விசாரணை அடிப்படையில் சதாம் உசைன் (31) என்ற துடியலூர் பகுதியை சேர்ந்த பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய இன்னொருவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடிக் கொண்டுள்ளோம். சதாம் உசைன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார்.


இருவரும் எப்படி திட்டம் தீட்டினார்கள் என்ற கோணத்திலும், வேறு யாராவது சம்மந்தப்பட்டு இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சதாம் உசைன் மீது மேலும் சில வழக்குகள் உள்ளது. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். காந்திபுரம் பகுதியில் நடந்த வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 3 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்களா என்பதை இப்போது சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.




கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடை, காந்திபுரம் பகுதியில் பாஜக நிர்வாகி மோகன் என்பவரது கடை, மேட்டுப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் மற்றும் குனியமுத்தூர் பகுதியில் பாஜகவை சேர்ந்த தியாகு ஆகியோரது வீடுகள் என மொத்தம் 6 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதேபோல பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவியது.


தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை நகரில் உள்ள காவல் துறையினருடன் வெளி மாவட்டங்களில் இருந்தும் காவலர்கள் பாதுகாப்பிற்காக கோவைக்கு  வரவழைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு காவல் படையினர், தமிழ்நாடு காமாண்டோ போலீசார், அதிவிரைவுப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மொத்தமாக கோவை மாநகர காவலர்கள் மற்றும் வெளிமாவட்ட காவலர்கள் என மொத்தம் 4000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கோவை நகருக்குள் நுழையும் வழியில் 11 சோதனை சாவடிகள் தவிர, கூடுதலாக நகரில் 28 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஒரு காவல் நிலையத்திற்கு 3 ரோந்து வாகனங்கள் வீதம் 15 காவல் நிலையத்திற்கு 45 ரோந்து வாகனங்கள் ரோந்து பணியில்  ஈடுபடுத்தபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண