கோவை அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த இரண்டரை வயது குழந்தையை கொலைசெய்த வழக்கில் தாய் மற்றும் அவரது தகாத நட்புகொண்ட காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை தம்மம்பதி கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் இரண்டரை வயது சிறுமி நிவ்யாஸ்ரீ உடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நிவ்யா ஸ்ரீ சந்தேகத்திற்கு உரிய வகையில் உயிரிழந்தது.

இதுகுறித்து ஆனைமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சரோஜினி ஆனைமலை தெற்கு கிராம நிர்வாக அலுவலர் சம்பத்திடம் சரணடைந்து, நிவ்யாஸ்ரீயை கழுத்து நெறித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். கிராம நிர்வாக அலுவலர் ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், காவல் துறையினர் சரோஜினியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனக்கும் தன் கணவருக்கும் அடிக்கடி சண்டைவரும் என்பதால் எனது அம்மா வசிக்கும் சேத்துமடை அண்ணா நகர் பகுதி வீட்டுக்கு சென்று விடுவதாகவும், அப்போது கூலி வேலைக்கு செல்லும் போது சர்க்கார்பதி பகுதியை சேர்ந்த பொம்மன் என்கிற சின்ன பொம்மன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இருவரும் தனிமையில் இருந்ததாகவும், தங்களின் தகாத உறவுக்கு சிறுமி இடைஞ்சலாக உள்ளதால் நிவ்யாஸ்ரீயை கொலைசெய்ய பொம்மன் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதன் பேரில் தனது கணவர் மணிகண்டன் வேலைக்கு சென்ற பிறகு நிவ்யாஸ்ரீயை கடந்த 14-ஆம் தேதி கழுத்தைநெரித்து கொலை செய்தாகவும், காவல் துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் சரணடைந்ததாகவும் சரோஜினி காவல் துறையினரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து சந்தேக மரணம் என்பது கொலை வழக்காக மாற்றப்பட்டு, சரோஜினியை ஆனைமலை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பொம்மனை சேத்துமடை பேருந்து நிறுத்தத்தில் காவல் துறையினர் பிடித்தனர்.  இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.