கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சமுதாயப் பொறுப்பு நிதியின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 10 பேட்டரியில் இயங்கும் லோடு ஆட்டோக்களை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து  தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவை மாநகராட்சியில் பத்து பேட்டரி வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. பேட்டரியை பயன்படுத்தி ஓடும் இந்த வாகனங்கள் மதிப்பு 50 லட்சம் ரூபாய் ஆகும். பேட்டரியினால் ஓடும் வாகனங்களால்  சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். மாநகராட்சியில் சாலை புனரமைப்பு பணிகள் 68 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன. 760 பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 445 சாலை பணிகள் துவங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.


பில்லூர் அணையில் இருந்து குடிநீர் கொண்டு  வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது டெங்கு பரவுகின்ற சூழ்நிலை இருப்பதால் சுகாதார மையங்களில் கூடுதல் மருத்துவர்கள், ஊழியர்கள் நியமிக்கபட்டுள்ளனர். டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர். பொது மக்கள் வீடு, வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புயலின் காரணமாக காஞ்சிபுரம், சென்னை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை அதிகளவில் பெய்துள்ளது. முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மிக வேகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிர் இயல்பான சூழ்நிலைக்கு கொண்டுவரப்பட்டது.




பிளாஸ்டிக் பாட்டில், சாக்கடை அடைத்திருந்த காரணத்தினால் தான்  மழை நீர் சாலையில் தேங்கியது. பொங்கல் பரிசு வழங்கும் பணிகளை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். இந்த பொங்கல் பரிசு பல்வேறு இடங்களில் கொடுக்கப்பட்டு வருகிறது. வருகின்ற 14ம் தேதி வரை தொடர்ந்து பரிசு தொகுப்பு வழங்கப்படும்.  நிதி பிரச்சனை இருந்தும்,  யாரும் விடுபடக் கூடாது என முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். கோவை மாவட்டத்தில் 1537 கடைகளுக்கு 122.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 2 கோடியே 20 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகை  கொடுக்கப்பட இருக்கின்றது.


முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஏழு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு வந்துள்ளது. 636 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 27 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மகளிர் உரிமைத்தொகை, இலவச பயண பேருந்து, காலை உணவு திட்டம்,  பெண்களுக்கு ஆயிரம் ரூபாய்  என பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவையில் அதிக மழை வந்தால் அதை எதிர் கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். எந்தெந்த பகுதியில் பாதிப்பு இருக்குமோ அங்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை  செய்துள்ளனர்.


ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு  ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொரொனா நோய் தொற்றை பொருத்தவரை கேரளாவில் இருந்து வருபவர்களை கண்காணித்து வருகிறோம். விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயணிகளையும் கண்காணித்து வருகிறோம். விமான நிலையத்தில் விமான வருகை குறைவு குறித்து முதல்வரின்  கவனத்திற்கு  எடுத்துசென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் மதுபான விற்பனை இலக்கு  எதுவும்  நிர்ணயிக்கப்படவில்லை. வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை. மது குடிப்பவர்கள் வேறு எங்கும் போகக்கூடாது என்பதை கண்காணித்து வருகிறோம். டெட்ரா பாக்கெட் குறித்த ஆய்வு செய்யப்படுகிறது. அது குறித்து பிறகு முடிவு எடுப்போம். இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. வீட்டுவசதி வாரித்தின் கீழ் டாக்குமெண்ட் இல்லாமல் இருக்கும் வீடுகளை யாரிடம் நாங்கள் ஒப்படைப்பது என்பது குறித்து நீதிமன்ற வழிகாட்டுதல்படி  நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.