“கைக்குள் ஸ்டேப்ளர் பின் வைத்து தைத்த மருத்துவர்கள்” - கோவையில் அதிர்ச்சி சம்பவம்...
கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் அதிர்ச்சி. கைக்குள் ஸ்டேப்ளர் பின் வைத்து மருத்துவர்கள் தைத்ததாக எலக்ட்ரீசியன் புகார்

கோவை அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்த நபருக்கு ஸ்டேப்ளர் பின்னை வைத்து மருத்துவர்கள் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ அலட்சியமா?
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சரத்பாபு என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில் காங்கேயத்தில் இருந்து ஆலம்பாடி சென்று கொண்டிருந்தார். அப்போது, நிலை தடுமாறி தவறி விழுந்ததில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் கையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மாதங்கள் கடந்த போதும் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வலி குறையாமல் அதிக வலி இருந்துள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று சரத்பாபு பரிசோதனை செய்தார். அப்பொழுது அறுவை சிகிச்சை செய்த அவரது கை எலும்பில் ஸ்டேப்ளர் பின் இருப்பதாகவும், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டு உள்ளார். அப்பொழுது அங்கிருந்த மருத்துவர்கள் அலட்சியமாக பதிலளித்ததுடன் அலைகழிப்பு செய்ததாக சரத் பாபு குற்றம் சாட்டினார்.
ஜிப்மர் பரிசோதனையில் வெளிச்சம்
கோவை அரசு மருத்துவமனையில் அவரது கையில் அறுவை சிகிச்சை செய்த போது தவறுதலாக ஸ்டேபிளர் பின்னை உள்ளே வைத்து தைத்து உள்ளதை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீண்டும் அறுவை சிகிச்சை செய்து ஸ்டேப்ளர்பின்னை நீக்கவேண்டும் என சரத்பாபு கோரிக்கை விடுத்துள்ளார். உயிர் காக்கும் மருத்துவர்கள் இதுபோன்று கவன குறைவால் செயல்படுவது நோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.





















