தேர்தல் காரணமா? மக்களின் உயிர் ஆபத்தில் – சிறுத்தை நடமாட்டம் மீது அண்ணாமலை காட்டம்...
பகல் நேரத்திலும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர அஞ்சும் சூழ்நிலை நிலவுகிறது என அண்ணாமலை காட்டம்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் மற்றும் கக்குராயன் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களிடையே அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது.
20 நாட்களாக பிடியிலில்லை சிறுத்தை
இந்த நிலையில், அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, நிலவும் சூழ்நிலையை கடுமையாக விமர்சித்துள்ளார். சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறைக்கும், கிராம மக்களுக்கும் தகவல் கிடைத்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், இதுவரை அந்த விலங்கை பிடிக்க முடியாமல் இருப்பது மக்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பகல் நேரத்திலும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர அஞ்சும் சூழ்நிலை நிலவுகிறது. இத்தகைய அவசர நிலைமையில் நிர்வாகம் எங்கு செயல்படுகிறது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தேர்தல் பணிகளில் அரசு இயந்திரம் முழுமையாக ஈடுபட்டிருக்கும் சூழலில் கூட, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை எந்த சூழலிலும் புறக்கணிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார். தமிழக வனத்துறை உடனடியாக தலையிட்டு, கேமரா டிராப்கள் மற்றும் தானியங்கி கூண்டுகள் போன்ற நவீன முறைகளை பயன்படுத்தி, விஞ்ஞான ரீதியான தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“ஒவ்வொரு நொடியும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தேர்தலை காரணம் காட்டி அலட்சியம் காட்டக் கூடாது” என அவர் தனது பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை புறநகர் பகுதிகளில் மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த கருத்து வனத்துறை அதிகாரிகள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















