கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, பில்லூர் 3 உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சிறுவாணி அணை நீர், மாநகராட்சியின் 100 வார்டுகளில் 23 வார்டுகளுக்கு முக்கியமாக வழங்கப்படுகிறது. மேலும், அணைக்கு அருகிலுள்ள கிராமப்புற பகுதிகளுக்கும் இந்த நீர் பயன்படுத்தப்படுகிறது.
கோவை குடிநீர் ஆதாரத்தில் சரிவு
கடந்த ஆண்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை நல்ல அளவில் பெய்ததால், கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பிய நிலையில் காணப்பட்டன. சிறுவாணி அணையும் முழு கொள்ளளவை எட்டியிருந்தது. இந்த அணையின் முழு உயரம் 49.5 அடி என்றாலும், பாதுகாப்பு காரணங்களால் கேரள அரசு 44 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க அனுமதி வழங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கம் முதல் கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது சிறுவாணி அணையின் நீர்மட்டம் 19.7 அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் குறைந்ததால், அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு நாளுக்கு 10 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது தினசரி 5 கோடி லிட்டர் மட்டுமே எடுக்கப்படுகிறது.
சிறுவாணி அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் சுமார் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். கோடை மழை தொடர்ந்து பெய்தால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு இருப்பதாகவும், மே மாத இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் பருவமழை தொடங்கும் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
