கோவை மாநகராட்சியில் 97 வது வார்டு வேட்பாளராக திமுக சார்பில் நிவேதா என்பவர் போட்டியிடுகின்றார். இவர் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதியின் மகள். திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 22 வயதான இளம் வேட்பாளரான நிவேதா, கோவை மாநகராட்சியின் அக்கட்சியின் மேயர் பதவிக்கான போட்டியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அப்பகுதியில் நிவேதா வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் மீது அதே வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் நிரஞ்சனா தேவி  என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் புகார் மனு அளித்தார். அதில் தேர்தல் விதிகளை மீறி செயல்படும் நிவேதாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 


 



நிவேதா சேனாதிபதி


இது குறித்து சுயேச்சை வேட்பாளர் நிரஞ்சனா தேவி கூறும் போது, “கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 97 வது வார்டில்  திமுகவினர்  வரம்பு மீறி செயல்படுகின்றனர். திமுக  வேட்பாளர் நிவேதா மாவட்ட செயலாளர் சேனாதிபதியின் மகள் என்பதால் தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு அதிகாரிகள் செயல்படுகின்றனர். 3 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், 97 வது வார்டில் மட்டும்  ஏராளமான வாகனங்கள் தேர்தல் பணிக்காக சுற்றி வருகின்றன. அந்த வார்டில் உள்ள வாக்காளர்களுக்கு குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் கொடுப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சுயேச்சை வேட்பாளரை விலைக்கு வாங்கி, அவரது பரப்புரை வாகனத்தில் நிவேதா உருவபடம் பொறித்த பேனர்களை கட்டி நிவேதாவிற்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்து வருகின்றனர்.  
97 வது வார்டில் மட்டும் 3  கோடி ரூபாயை  தாண்டி திமுகவினர் செலவு செய்து இருக்கின்றனர். அடுத்த சில தினங்களில் இன்னும் செலவு செய்வார்கள். அதனால் தேர்தல் நியாயமாக நடைபெறாது. எனவே 97 வது  வார்டில் மட்டும் தேர்தலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.


 



திமுக வழங்கிய பரிசுப் பொருள்


வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது. 9 பேரூராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 802 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 3352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100  வார்டுகளில், 778 பேர் போட்டிடுகின்றனர்.  நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.