கோவையில் போலீஸ் போல வேடமணிந்து அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து வந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை மாவட்டம் ஈச்சனாரியை அடுத்த மாச்சேகவுண்டன் பாளையம் பகுதியில் தினேஷ் என்பவரின் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீரபத்திரன் என்பவர் வாடகைக்கு குடி வந்துள்ளார். அப்போது அவரது ஆதார் நகல் மற்றும் அவரது சகோதரர் வினு என்பவரின் போலீஸ் அடையாள அட்டை நகலை கொடுத்துள்ளார். தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தினேஷ் அங்குள்ள கோவிலுக்கு சென்ற போது வினுவை சந்தித்துள்ளார். அவரிடம் எந்த காவல் நிலையத்தில் பணிபுரிகிறீர்கள் என தினேஷ் கேட்ட போது, தான் அமைச்சருக்கு பாதுகாப்பு பணியில் இருப்பதாக வினு தெரிவித்துள்ளார். அப்போது தினேஷ் உறவினர் அம்சவேனி என்பவரும் வந்த நிலையில், தான் அமைச்சருக்கு எஸ்கார்ட் பணியில் இருப்பதால் அரசு வேலை வாங்கி தருகிறேன் எனவும், அதற்கு 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதற்கு வீட்டில் பேசிவிட்டு தகவல் கொடுப்பதாக கூறி தினேஷும், அம்சவேனியும் சென்றுள்ளனர்.


போலி போலீஸ் கைது


இந்நிலையில் கடந்த 3ம் தேதி தினேஷ் அந்த வீட்டிற்கு சென்ற போது, வீட்டின் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் இருந்த சில பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. அக்கம்பக்கத்தினரிம் கேட்ட போது மூன்று, நான்கு தினங்களாவே வீட்டிற்கு யாரும் வரவில்லை என தெரிவித்துள்ளனர். பிறகு தினேஷ் மாற்று சாவியை கொண்டு வீட்டை திறந்து பார்த்த போது, வீட்டிற்குள் கைத்துப்பாக்கி, போலிசார் பயன்படுத்தும் தடிகள், மெட்டல் டிடெக்டர், தமிழ்நாடு காவல் துறை என அச்சிடப்பட்ட அடையாள அட்டை ஆகியவை இருந்துள்ளன. வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தததால் அதிர்ச்சியடைந்த தினேஷ்க்கு, அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர் அவர் அனைத்து பொருட்களை எடுத்து கொண்டு சென்று மதுக்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.


இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வந்தனர். அப்போது வினு மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஏற்கனவே உதவி ஆய்வாளர் எனக்கூறி அரசு வேலை வாங்கி வருவதாக மோசடி செய்த வழக்கு விசாரணையில் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து வினு மற்றும் வீரபத்திரன் ஆகியவை இருவரையும் காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் வினுவை (34) காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி, லத்தி, மெட்டல் டிடெக்டர், அடையாள அட்டை உள்ளிட்டவைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வீரபத்திரனை போலிசார் தேடி வருகின்றனர்.