திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக‌ அரசையும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் சபாநாயகர் தனபால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர். ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”கோவை மாவட்டமே திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டு இருக்கிறது. அண்ணா திமுக எழுச்சியானால் யாரும் தங்கமாட்டார்கள். 7 மாதத்தில் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்த அரசு திமுக அரசு. தேர்தலின் போது கொடுத்த 525 வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை.




பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். நீட் தேர்வினால் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வால் எத்தனை உயிர் போய் விட்டது?. மாணவர்கள் தற்கொலை செய்யக்கூடாது. அது தவறு. நீட் தேர்வை இரத்து செய்வதாக கூறிய திமுக தலைவர் ஸ்டாலின் அதை செய்யவில்லை. பத்திரிகைகள் மிரட்டப்படுகின்றன. முக்கிய பத்திரிகைகள் திமுகவிற்கு சாதகமாக செய்திகள் வெளியிடுகின்றன. திமுக ஆட்சியில் பாசிட்டிவ் நியூஸ் எதுவும் இல்லை. அதிமுக திட்டங்களை தான் திமுக செய்து கொண்டிருக்கிறது. ஆட்சி மாற காரணம் பத்திரிகைகள் தான். பத்திரிகைகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.


அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கொடுத்துள்ளோம். சட்டமன்ற தேர்தலில் பத்து தொகுதிகளிலும் அதிமுக வென்றதால் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறது. பத்து ஆண்டு ஆட்சியில் எங்கும் கட்டஞ்சாயத்து, கந்து வட்டி கிடையாது. காவல் துறை அதிகாரிகள் திமுக பேச்சைக் கேட்டு செயல்படுகின்றன. திமுக ஆட்சி நிலைக்காது. கண்டிப்பாக அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். காவல் துறை அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டால் கமிசனர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். எல்லாத்துக்கும் தயாராக இருக்கிறோம். எங்களை சீண்டி பார்க்காதீர்கள். ரெய்டு, வழக்கு எதற்கும் அஞ்ச மாட்டோம். எந்த தவறு செய்தாலும் தட்டி கேட்போம். ஸ்டாலினை எதிர்த்து பேசியதால் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போடுகிறார்கள். பொய் வழக்கு போட ரூம் போட்டு யோசிக்கிறார்கள். கண்டிப்பாக நீதி வெல்லும். 




கோவை மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட வளர்ச்சி பணிகளை தொடர வேண்டும். கோவை மாவட்டத்தில் திமுகவை மக்கள் புறக்கணித்துள்ளனர். பணத்தை கொடுத்து உள்ளாட்சியை பிடித்து விட முடியாது. திமுக அரசு மக்கள் விரோத அரசு. சென்னை வெள்ளத்திற்கு முறையாக தூர்வாறதே காரணம்.  திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்றால் முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்துகின்றனர். கட்சிக்கும், தொண்டர்களுக்கும், தலைவருக்கும் விசுவாசமாக இருந்தேன். திட்டம் போட்டு ரெய்டு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் அமைதி இல்லை. பாதுகாப்பு இல்லை. ஐநூறுக்கும் மேற்பட்ட கொலைகள் திமுக ஆட்சியில் நடந்துள்ளன. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அரசு நிவாரணம் தரவில்லை. 


பொய் வழக்கு போடுவதை காவல் துறை நிறுத்திக் கொள்ள வேண்டும். கோவையில் தான் பொய் வழக்குகள் அதிகமாக போடப்படுகிறது. யாருக்கும் பயப்படமாட்டோம். காவல் துறையினருக்கு உறுதுணையாக இருப்போம். சட்டத்தை மீற மாட்டோம். தயவுசெய்து ஜால்ரா போடாதீர்கள். பொங்கலுக்கு பரிசுப் பொருட்கள் மட்டுமின்றி 5 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும். இந்த ஆட்சி 5 வருடம் ஓடாது. சீக்கிரம் முடிவுக்கு வரும். அரசு அதிகாரிகள் பயத்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம். கோவையை புறக்கணிக்க கூடாது” என அவர் தெரிவித்தார்.


இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, “கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட வேலை உத்தரவுகளை நிறுத்தி வைத்துள்ளார்கள். ஸ்மார்ட் சிட்டி, பால வேலைகள் மெதுவாக செய்யப்பட்டு வருகின்றன. எங்களை காழ்புணர்ச்சியோடு பழிவாங்குகிறார்கள். ஆனால் மக்களை பழிவாங்க கூடாது. நிறுத்தப்பட்டுள்ள வேலைகளை செய்ய வேண்டும். காழ்புணர்ச்சியோடு நடத்தப்படும் ரெய்டுகளை சட்ட ரீதியாக சந்திப்போம்” என அவர் தெரிவித்தார்.