கோவையில் மெட்ரோ இரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து கோவையில் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து கோயம்புத்தூர் மாஸ் ரேபிட் டிரான்ஸிட் அமைப்பிற்கான சாத்தியக்கூறு ஆய்வு தமிழ்நாடு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், முதற் கட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையானது சமர்பிக்கப்பட்டது. இதில் மொத்தம் 139 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், சத்தியமங்கலம் சாலையில் உக்கடத்தில் இருந்து வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்படும். இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் விரிவான ஆய்வுக்குப் பிறகு ஒரே நேரத்தில் செய்யப்படும் மேம்பாலங்கள் கட்டப்படும் இடங்களுக்கு இணையாக மெட்ரோ இயக்கப்பட்டு, அதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.




வல்லுநர் குழு ஆய்வு


கோவை மாவட்டத்தில் அவிநாசி சாலை மற்றும் சக்தி சாலை ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களில் இந்த மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அவிநாசி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், லட்சுமி மில்ஸ், நவ இந்தியா, பீளமேடு, கோவை மருத்துவக் கல்லூரி, சித்ரா வழியாக நீலாம்பூர் வரை 20.4 கிமீ தூரத்திற்கு 17 ரயில் நிலையங்களை கொண்டும், சக்தி சாலையில் காந்திபுரம் பகுதியில் துவங்கி கணபதி, ராமகிருஷ்ணா மில்ஸ், விநாயகபுரம், சரவணம்பட்டி, விஸ்வபுரம் வழியாக வளையம் பாளையம் வரை 14.4 கிமீ தூரத்திற்கு 14 ரயில் நிலையங்களை கொண்டும் அமைய இருப்பதாக கடந்த ஆண்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்த ரயில் வழித்தடங்கள் அனைத்தும் உயர் மட்ட வழித்தடங்களில் அமைய உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்தத் திட்டத்தின் இயக்குனர் அர்ஜுனன், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூத்த போக்குவரத்து நிபுணர் வெங்கியூ, சென்னை மெட்ரோ ரயில் திட்ட தலைமை பொதுச் செயலாளர் ரேகா அடங்கிய குழுவினர் கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் கால முறை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். உக்கடம் பேருந்து நிலையத்தின் அமைப்பு அங்கு உள்ள மேம்பாலத்தின் அமைப்புகள் ஆகியவற்றை பார்வையிட்ட அவர்கள் மெட்ரோ வழித்தட வரைபடங்களை கொண்டு ஆய்வு செய்தனர்.