கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியின்போது தோண்டப்பட்டிருந்த ஆழமான குழியில் சைக்கிளுடன் முதியவர் ஒருவர் விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

Continues below advertisement

தண்ணீர் பந்தல் பிரதான சாலையில் பல மாதங்களாக ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் பல இடங்களில் ஆழமான அஸ்திவாரக் குழிகள் தோண்டப்பட்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அந்த வழியாக சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர், கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த குழியை கவனிக்காமல் சைக்கிளுடன் அதற்குள் விழுந்தார். குழிக்குள் இரும்புக் கம்பிகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் இருந்ததால் அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று முதியவரை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவருக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இந்த விபத்துக்கு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் பாதுகாப்புத் தடுப்புகள் போதுமான அளவில் அமைக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், விபத்துக்குப் பிறகே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் தரப்பினர் அவசரமாக பாதுகாப்புப் பலகைகள் அமைத்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி, பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.