கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனிடையே நாம் தமிழர் நடத்தும் இடத்தில் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினார். இதனை திமுகவினர் ஏற்க மறுத்ததால், காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது திமுகவினர் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது திமுகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்திய திமுகவினர் 15 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் சீமான் தலைமையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுக்கும், தமிழ்நாடு அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுவிக்க கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றோம். 10 ஆண்டுகளுக்கு  மேலாக சிறையில் இருக்கும்  கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்கின்றனர். ஆனால் ராஜிவ் கொலை, இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க மறுக்கின்றனர். இஸ்லாமியர் என மதத்தை பார்க்காமல் மனிதம் பார்க்க வேண்டும்.




அண்ணா பிறந்தநாளில் 700 சிறைகைதிகளில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை. மதவாத்திற்கு எதிரானவர் என பேசி, இடதுசாரி, முற்போற்கு என பேசி இஸ்லாமியர்களை  விடுவிக்காமல் இருக்கின்றது. இது குறித்து குழு அமைக்க போவதாக தமிழக அரசு சொல்கின்றது. மக்களின் உணர்வு விடுதலை தான். இதில் குழு என்பது தேவையற்றது. மதத்தை பார்க்காமல் மனிதம் பார்க்கவேண்டும். எதிர்கட்சியாக இருந்த போது 7 தமிழர் விடுதலை பேசுகின்றனர். இப்போது திமுகவினர் பேச மாட்டார்கள். இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வாய்ப்பு தாருங்கள் என கேட்டதால் திமுகவிற்கு இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்தினர். மனிதநேய அடிப்படையில், கருணை  அடிப்படையில் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும்.




திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராடுவதில் பெருமைதான். அந்த அளவிற்கு பெரிய ஆளாகி இருக்கின்றோம். அரசியல்ல இதெல்லாம் சாதாரணம். தரக்குறைவு பேச்சு என்பதை திமுக பேசக்கூடாது. அவர்கள் தரக்குறைவாக தான் பேசுவாங்க. சின்னம்மாவை அம்மாவாக்க போகின்றேன் என திமுகவினர் பேசுகின்றனர். அரசுக்கு எதிராக பேசக்கூடாது என்பது நல்ல ஜனநாயகம் அல்ல. பாஜகவே இதைத்தான் செய்கின்றது. அதையே திமுகவும் செய்கின்றது. அரசுக்கு எதிராக பேச வேண்டும் என்பது மனநோய் அல்ல. அரசு சரியாக இருந்தால் பேசப்போவதில்லை" என அவர் தெரிவித்தார்.