கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 5 நாட்களாக குப்பை அள்ளவில்லை என்பதால், மனமுடைந்த திமுக கவுன்சிலர் மகன்களுடன் சேர்ந்து குப்பை அள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதற்கு தலைவராக மெஹரீபாபர்வீன், துணைத் தலைவராக அருள் வடிவு ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டில் திமுக நகர செயலாளர் முகமதுயூனஸ் மனைவி ஜம்ரூத் பேகம் வார்டு உறுப்பினராக உள்ளார். இவரது வார்டில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல், குடியிருப்புகளில் குப்பைகளை சேகரித்தல், குடிநீர் விநியோகம் முறையாக வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து தரக் கோரி நகராட்சி நிர்வாகத்திடம் வார்டு உறுப்பினர் ஜம்ரூத்பேகம் பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் நகராட்சி தலைவர் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.


இதனிடையே இவரது வார்டில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து வார்டு பகுதியில் உள்ள மக்கள் இவரது வீட்டிற்கு சென்று இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜம்ரூத் பேகம் மற்றும் இவரது மகன்கள் ஆகியோர் சேர்ந்து வார்டு பகுதியில் தேங்கியிருந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே ஒரு வார்டு உறுப்பினர் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை எடுக்காததால் தனது மகன்களுடன் சேர்ந்து குப்பைகளை எடுத்ததை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் இதனால் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண