முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தினர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தினர்.


முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்ட பலரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தனிப்படை காவல் துறையினர் 300 க்கும் மேற்பட்ட நபர்களிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்டது. இதையடுத்து ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதாரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை கடந்த 2021 ம் ஆண்டில், நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். ருவர் மீதும் சாட்சியங்களை மறைத்தல், சாட்சியங்களை அழித்தல், சாட்சிகளை தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த தனபால், கடந்த வாரம் நில மோசடி வழக்கில் ஒன்றில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சில நாட்களுக்கு முன் தனபாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.


சேலம் மத்திய சிறையில் நேற்று காலை உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால், இரண்டாவது முறையாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு தனபால், காவல்துறை பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வரப்பட்டார். இதய பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனபாலுக்கு, நாளை ஆஞ்சியோ செய்ய உள்ளதாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.