ஆன்லைன் செயலியில் லாபம் காட்டி ஏமாற்றம்... கோவை பெண்ணிடம் ரூ.1.66 கோடி கணக்கில் மோசடி...
இன்ஸ்டாகிராம் மூலம் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி, கோவை மூதாட்டியிடம் ரூ.1.66 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சைபர் கிரைம் போலீசார், ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி 63 வயது மூதாட்டியிடம் ரூ.1.66 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 63 வயது மூதாட்டி, தனது கணவருடன் வசித்து வருகிறார். அவரது கணவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்த மூதாட்டி சமூக வலைத்தளமான Instagram பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, “ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்” என்ற விளம்பரம் ஒன்றைக் கண்டுள்ளார்.
அதனை நம்பி, அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பேசிய நபர், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும், ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் பணம் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மூதாட்டி முதலீடு செய்த ஒவ்வொரு முறையும், லாபத்துடன் கூடிய தொகை செயலியில் அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும், எந்த நேரத்திலும் பணத்தை வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டதால், ஆரம்பத்தில் சிறிய தொகையை மாற்றியபோது அது வங்கி கணக்கில் வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடையாத மூதாட்டி, பல தவணைகளில் மொத்தம் ரூ.1.66 கோடி முதலீடு செய்துள்ளார்.
பின்னர் அவசர தேவைக்காக பணத்தை திரும்ப பெற முயன்றபோது, கூடுதல் தொகை செலுத்தினால் மட்டுமே பணம் எடுக்க அனுமதிப்போம் என கூறி, தொடர்பை துண்டித்துள்ளனர். தொடர்ந்து அழைத்தபோது செல்போன் எண் அணைக்கப்பட்டது.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். ரூ.1 கோடிக்கு மேல் மோசடி வழக்குகள் சென்னை போலீசார் விசாரணைக்கு உட்பட்டதால், இந்த வழக்கு மேலான விசாரணை சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















