சின்னவேடம்பட்டி பகுதியில் நிலத்தடி நீர் மாசுபட்டு வருவதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி, அப்பகுதி பொதுமக்கள் சாயம் கலந்த தண்ணீருடன் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

கோவை மாநகரை ஒட்டிய சின்னவேடம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர் முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படுவதால், நிலத்தடி நீர் மாசுபட்டு நிறம் மாறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆட்சியரகத்தில் மக்கள் நேரடி புகார்

Continues below advertisement

குடிநீர் மற்றும் வீட்டு பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் கிணறு மற்றும் போர்வெல் நீரில் சாயம் கலந்த நிறம் காணப்படுவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது என பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த மாசுபட்ட நீரை பயன்படுத்தி வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தோல் நோய், வயிற்றுப்போக்கு, அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

இது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சின்னவேடம்பட்டி பகுதி மக்கள், மாசுபட்ட தண்ணீரை பாட்டில்களில் கொண்டு வந்து கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் அதிகாரிகளிடம் நேரில் புகார் அளித்தனர். மேலும், இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படாவிட்டால் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

 

புகாரை பெற்ற மாவட்ட நிர்வாகம், சம்பவம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.