சிக்காமல் சிக்கிய பலே திருடர்கள்... 40 சவரன் நகையுடன் சிக்கியது எப்படி?
கோவை புறநகர் பகுதியில் பல நாட்களாக போக்கு காட்டி வந்த பலே திருடர்கள் இருவர் 40 சவரன் நகையுடன் சிக்கினர்.

கோவையின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகத் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் தொடர்கதையாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் மணியக்காரர்பாளையம் - புதுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.
40 சவரன் நகைகளுடன் திருடர்கள் கைது:
சோதனையில், தங்கச் செயின்கள், மோதிரங்கள் மற்றும் பிரேஸ்லெட்டுகள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பிடிப்பட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் சரவணன் என்பது தெரியவந்தது. கோவை கிணத்துக்கடவு மற்றும் திருப்பூர் பகுதிகளில் தங்கி, ஆள் இல்லாத வீடுகளைக் குறிவைத்து, வீட்டின் கதவை உடைத்துப் பணம் மற்றும் நகைகளைத் திருடுவதை வாடிக்கையாகக் வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 40 சவரன் தங்க நகைகளை மீட்டனர். வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.























