கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் 6 பவுன் தங்க செயின் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீட்டுள்ளனர்.

Continues below advertisement

மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சிவகுமார் (56) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் பேபி என்ற இளைஞர் வீடு வாங்க விருப்பம் இருப்பதாகக் கூறி தொடர்பு கொண்டுள்ளார். பின்னர், சிவகுமாரை அவரது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கோட்டை பிரிவு பகுதியில் உள்ள ஒரு வீட்டைக் காண்பித்துள்ளார்.

அதன்பின், பன்னிமடை பகுதியில் தனக்கு சொந்தமான நிலம் இருப்பதாகவும், அதை விற்பனை செய்ய விரும்புவதாகவும் கூறி, பொன்னூத்து அம்மன் கோவில் வழியாக சிவகுமாரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றபோது, தனது நண்பர்களான மோகனகிருஷ்ணன் மற்றும் கண்ணதாசனை சம்பவ இடத்திற்கு வருமாறு பேபி அழைத்துள்ளார்.

Continues below advertisement

கடந்த ஜூன் 1-ஆம் தேதி மாலை, மூவரும் சேர்ந்து சிவகுமாரின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் தங்க செயினையும், அவரது கைப்பேசியையும் பறித்துக் கொண்டு, அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தடாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி, ரத்தினபுரியைச் சேர்ந்த பேபி @ மாயா (21), வடவள்ளியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் (27) மற்றும் கண்ணதாசன் (28) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க செயின் மற்றும் கைப்பேசி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.