கோவை பேரூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள கல்யாணி யானைக்காக கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கோவையில் நிலவி வரும் கடும் வெயிலால் யானைகள் உள்ளிட்ட விலங்குகள் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Continues below advertisement

அதன் ஒரு பகுதியாக, பட்டீஸ்வரர் கோவிலின் கல்யாணி யானை வழக்கமாகக் குளிக்கும் குளியல் தொட்டியின் அருகே புதிதாக பலமுனை தானியங்கி சவர் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த சவர்களில் இருந்து மேலிருந்து மழை போல குளிர்ந்த நீர் பொழியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால், யானையின் உடல் முழுவதும் குளிர்ச்சியடைகிறது.

குளிர்ந்த நீர் சாரலின் கீழ் கல்யாணி யானை மகிழ்ச்சியுடன் குளியல் போடும் காட்சி பக்தர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. தும்பிக்கையை உயர்த்தி தலையசைத்து உற்சாகமாக நீரில் நனைந்து விளையாடும் யானையின் செயல்பாடுகள் அங்கு வந்திருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Continues below advertisement

தினமும் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் கல்யாணி யானைக்கு இந்த சிறப்பு சவர் குளியல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் யானையின் உடல்நலனை கருத்தில் கொண்டு உணவு மற்றும் பராமரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோடை வெப்பத்திலிருந்து யானையை பாதுகாக்க கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு பக்தர்கள் மற்றும் விலங்கு நேயர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கல்யாணி யானையின் ஆனந்த குளியல் காட்சி தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.