கோவை ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் பெட்டியில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிடும் வகையில் ஒரு உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளரும், தொழிலதிபருமான பாபி குத்தகைக்கு எடுத்து ஹோட்டல் தொடங்கியுள்ளார். கடை விளம்பரத்திற்காக, அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும், நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு என்றும், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த கோவை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர்.


உணவகத்தை உரிமையாளர் பாபி செம்மனூர் போட்டியை தொடங்கி வைத்தார் முதல் சுற்றில் 25 பேர் கலந்து கொண்டனர். மேலும் போட்டியில் 400 க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்தப் போட்டியில் அதிக அளவில் பிரியாணி வைக்கப்பட்டதால் பலர் சாப்பிட முடியாமல் திணறினர். இருப்பினும் ஒரு சிலர் இரண்டாவது பிரியாணி முடித்துவிட்டு மூன்றாவது பிரியாணிக்கு சென்றனர். அப்போது சாப்பிட முடியாமல் சிலர் வாந்தி எடுத்ததால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டனர். போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆர்வமாக ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். கோவை மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான இளைஞர்களும் பெண்களும் போட்டியில் பங்கு வருவதற்காக வந்திருந்தனர். மேலும் உணவகத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. மேலும் சாலையோரம் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. வாகன போக்குவரத்து மிகுந்த ரயில் நிலையப் பகுதியில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டதாலும், நோ பார்கிங்க் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.


மேலாளர் மீது வழக்குப்பதிவு


இதனிடையே கணேசமூர்த்தி என்ற கால் டாக்சி டிரைவர் தனது மகனின் படிப்பு செலவிற்காக இந்தப் போட்டியில் கலந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், “எனது மகன் பிரவீன் ராஜ்க்கு பிறந்தது முதல் ஆடிசம் பாதிப்பு உள்ளது. பள்ளியில் சேர்த்து படிக்க 19 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அதற்காக தான் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளேன். தூத்துக்குடியில் அனைத்தையும் இழந்து இங்கு வந்துள்ளேன். ஒரு பாலக்காடு டிரைவர் சொன்னதால், இந்த போட்டியில் கலந்து கொண்டு பிரியாணி சாப்பிட்டேன். என் மகனை ஒரு ஆள் உடனிருந்து பார்த்து கொள்ள வேண்டியுள்ளது. அவனது படிப்பிற்கும், மருத்துவ செலவிற்கும் உதவுங்கள்” என கண்ணீர் மல்க தெரிவித்தார். போட்டியின் முடிவில் இரண்டரை பிரியாணிகளை சாப்பிட்ட கணேசமூர்த்தி இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார். இதையடுத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல மூன்று பிரியாணி சாப்பிட்டு முதல் இடம் பிடித்த சதீஷ் என்பவருக்கு ஒரு இலட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.


இந்நிலையில் எவ்வித முன் அனுமதியும் இன்றி பொது இடத்தில் மக்களை கூட்டி போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக உணவகத்தின் மேலாளர் கணேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பந்தய சாலை காவல் நிலையம் ஆய்வாளர் அர்ஜுன் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், உணவகத்தின் மேலாளர் கணேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.