கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் கோடை காலம் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் வனப்பகுதி வறண்டு போனது.


இதனால் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வர துவங்கின. இந்நிலையில் இன்று காலை 14  காட்டு யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்தது. மேலும் குடியிருப்பு பகுதியில் வழியாக சாலையை கடந்து சென்றது. அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோ காட்சிகளை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளனர்.



மேலும் தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அந்த யானை கூட்டத்தை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் மலை அடிவாரத்தில் வனத்துறையினர் விரட்டினர். இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் அந்த சாலையை கடந்து செல்கின்றனர்.  மேலும் வனத் துறையினர் யானைகள் ஊருக்குள் புகுந்து உயிர் சேதம் மற்றும் விவசாய நிலங்களை சேதத்தை ஏற்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.