கோவை இளைஞர்களுக்கு கொண்டாட்டம்! IBM-ன் அடுத்த அதிரடி: வேலைவாய்ப்பு பெருகும், வளர்ச்சி உச்சம்!
கோவையில் உற்பத்தியை தாண்டி தற்போது IT சார்ந்த வேலைகள் மற்றும் ICC மையங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக கோயமுத்தூர் மாவட்டம் திகழ்கிறது. கோயம்புத்தூர் ஏற்கனவே தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என பெயர் பெற்ற நகரம். இங்கே உற்பத்தியை தாண்டி தற்போது IT சார்ந்த வேலைகள் மற்றும் ICC மையங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
TECH நிறுவனங்களுக்கான மையமாக கோயம்புத்தூர் படிப்படியாக உருவெடுத்து வருகிறது. அதற்கேற்ப தமிழ்நாடு அரசும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. சிறந்த கல்வி நிறுவனங்கள், திறமையான மனித வளம் , தொழில் தொடங்க சாதகமான சூழல், அலுவலகங்களை அமைக்க சலுகை என பல்வேறு சௌகரியங்களும் இருப்பதால் பல்வேறு IT நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய அலுவலகத்தை கோயம்புத்தூரில் நிறுவி வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து ICC மையங்களும் விருப்பமான இடமாக கோயம்புத்தூர் இருக்கிறது. இந்த நிலையில் உலகளாவிய டெக் ஜாம்பவானாக கருதப்படும் IBM நிறுவனம் கோயம்புத்தூரில் மேற்கொண்டு தங்களுடைய அலுவலகத்தை விரிவாக்கம் செய்வதற்கு முன் வந்துள்ளது. கோயம்புத்தூரில் ஏற்கனவே IBM அலுவலகம் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தான் IBM நிறுவனம் கோயம்புத்தூரில் தன்னுடைய அலுவலகத்தை விரிவாக்கம் செய்தது. KGISS சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குள் இருக்கும் இந்தியா LAND TECH PARK வளாகத்தில் IBM நிறுவனம் தன்னுடைய அலுவலகத்தை விரிவாக்கம் செய்து கூடுதலாக 600 வேலை வாய்ப்புகளை உருவாக்கியது.
இந்த சூழலில் கோயம்புத்தூரில் மேலும் தங்களுடைய இருப்பை விரிவாக்கம் செய்வதாக IBM நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது .இதே பகுதியில் IBM நிறுவனம் கூடுதலாக 26,500 சதுர அடி பரப்பளிலான அலுவலக தளத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது. இதன் மூலம் கூடுதலாக 550 பேருக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய வகையில் இந்த பகுதியில் IBM நிறுவனம் அலுவலகத்தை அமைக்க இருக்கிறது. கோயம்புத்தூரில் IB,M நிறுவனம் தொடர்ச்சியாக தன்னுடைய இருப்பை வலுப்படுத்த முடிவெடுத்து இருப்பது கோவை இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறி இருக்கிறது.
IT வேலைகளுக்காக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை. சொந்த ஊரிலேயே இளைஞர்களுக்கு IT வேலைகள் கிடைக்கும். கோவை நகரம் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்வதற்கு இது உதவும். IBM நிறுவனம் தன் அலுவலகத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் மேற்கொண்டு பல நிறுவனங்களும் கோவையை நோக்கி படையெடுக்கும். வளர்ச்சி சென்னையோடு நின்றுவிட கூடாது என்பதற்காக அரசு மற்ற நகரங்களிலும் நிறுவனங்கள் அலுவலகத்தை தொடங்குவதை ஊக்குவித்து வருகிறது. இதற்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருகிறது. எனவே பெரிய நிறுவனங்கள் கோவையை நோக்கி வருகின்றன.























