வங்கி கணக்கு முடக்கம்: மோசடி பணம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? கோவை சைபர் கிரைம் போலீஸ் விளக்கம்!
வங்கி கணக்கை முடக்கம் செய்தால் என்ன செய்வது என்பது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
மோசடி நபர்களிடம் இருந்து யாராவது ஒருவரின் வங்கி கணக்குக்கு பணம் வந்தால் அந்த நபரின் வங்கி கணக்கு உடனடியாக முடக்கம் செய்யப்படுகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுத்து பயன்படுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்..இதுபோன்று வங்கி கணக்கை முடக்கம் செய்தால் என்ன செய்வது என்பது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
பகுதிநேர வேலை, ஆன்லைனில் முதலீடு, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக கூறி மோசடிகள் நடப்பது இப்போது அதிகமாகிவிட்டது. அதேபோல் சிலர் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி, சி.பி.ஐ., என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் வீடியோ காலில் பேசி டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி பணத்தை மோசடி செய்கிறார்கள். இதுபோன்ற புகார்கள் தமிழ்நாட்டில் அதிகமாகி வருகிறது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கு அதிக அளவில் புகார்கள் வருகிறது. இதனிடையே மோசடி நபர்களிடம் இருந்து யாராவது ஒருவரின் வங்கி கணக்குக்கு பணம் வந்தால் அந்த நபரின் வங்கி கணக்கு உடனடியாக முடக்கம் செய்யப்படுவதும் அதிகமாக இருக்கிறது.
இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுத்து பயன்படுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். இதுபோன்று வங்கி கணக்கை முடக்கம் செய்தால் என்ன செய்வது என்பது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறும் போது, சைபர் மோசடியில் ஈடுபடுபவர்கள், நேரடியாக நமது வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டியது இல்லை. யாரோ ஒருவரின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி, அந்த நபர் நமது வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி இருந்தாலும் உடனடியாக முடக்கப்படும்.
மோசடி நபர்கள் அனுப்பும் பணத்தால் சில நேரங்களில் வங்கி கணக்கு முடக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று, எதனால் கணக்கு முடக்கப்பட்டது என்று கேட்க வேண்டும். அவர்கள், எவ்வளவு பணம் வங்கி கணக்குக்கு வந்தது. யாரிடம் இருந்து வந்தது. எந்த போலீசார் கணக்கை முடக்கம் செய்தனர் என்ற தகவலை வங்கி அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.
அந்த தகவலுடன் சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கு வந்தால், சம்பந்தப்பட்ட போலீசாரின் தொடர்பு எண், புகார்தாரரின் செல்போன் எண், மனு எண் ஆகியவற்றை கொடுப்பார்கள். உடனே போலீசார் எண், மனுதாரரின் எண்ணில் பேசி தங்களுக்கு தொடர்பு இல்லை என்பதை தெரிவித்தால் வங்கி கணக்கை முடக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கி விடுவார்கள். இதுபோன்ற விஷயத்தில் சிக்காமல் இருக்க அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து நமது வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்ப சொல்லக்கூடாது. குறிப்பாக தெரியாத நபர்கள் யாரிடமாவது இருந்து நமது வங்கி கணக்குக்கு பணம் வந்தால், உடனடியாக வங்கிக்கு சென்று, பணம் வந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். அந்த பணத்தை நமது வங்கி கணக்கில் இருந்து எடுக்க சொல்ல வேண்டும். இல்லை என்றால் மோசடி நபர்களிடம் இருந்து பணம் வந்து இருந்தால் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படும் இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















