கோவையில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "கோவை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளன. அறப்போர் இயக்கம் பல ஊழல்களை வெளிக்கொண்டு வந்துள்ளோம். ஊழல் முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருக்கு நெருங்கிய ஓப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து அறப்போர் இயக்கம் சார்பில் டெண்டர் வழிமுறை மாற்றங்கள், துறை ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாக மனு அளித்துள்ளோம். கோவை மாநகராட்சி நேர்மையான மாநகராட்சியாக வேண்டியது அவசியம். ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட செந்தில் கோ, கேசிபி நிறுவனம் உள்ளிட்ட வேலுமணியின் நெருங்கிய ஒப்பந்ததாரர்களின் நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு உள்ளான மாநகராட்சி பொறியாளர்கள் லட்சுமணன், சரவணக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகளை கண்டறிந்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.




கோவை மாநகராட்சி டெண்டர்களில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களை இரண்டு பேர் மட்டுமே பங்கேற்று வந்துள்ளனர். அரசின் அனுமதி வாங்காமல் மாநகராட்சியே தீர்மானிக்கும் வகையில் ஒரே வேலையை பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளன. டெண்டர் விதிமுறைகள் பின்பற்றப்படாமல் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலை மாறி ஒரு டெண்டருக்கு பத்து, பதினைந்து பேர் போட்டியிட வேண்டும். அப்போது தான் தரமான வேலை குறைந்த விலையில் நடைபெறும். சாலைகள் சீரமைக்கும் போது, தோண்டி எடுத்து சாலை அமைக்க வேண்டும். சாலையின் உயரத்தை அதிகரிக்கக் கூடாது. அவ்வாறு செய்யததால் மழை நீர் வீடுகளுக்குள் செல்கிறது.


அடுத்த கட்டமாக டெண்டர்கள் இ-டெண்டர்களாக மாற்ற வேண்டும். இ-டெண்டர் நடைமுறை முழுவதும் ஆன்லைன் மூலமாக நடைபெற வேண்டும். ஒப்பந்தராரர்கள் பொறியாளர்களை சந்திக்கும் வகையில் இருக்க கூடாது. இ-டெண்டர் சென்னை மாநகராட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியிலும் விரைவில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கிறோம். அனைத்து டெண்டர் விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும். டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை அவசியம்.


கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அம்மா ஐஏஎஸ் அகாடமி விதிமுறைகளை மீறி, எஸ்.பி.வேலுமணியின் சகோதரார் அன்பரசன் நடத்தும் நல்லறம் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது. சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், எஸ்.பி.வேலுமணி அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக குறைந்த வாடகைக்கு வழங்கியுள்ளார். அம்மா ஐஏஎஸ் அகாடமிக்கு அனுமதியை ரத்து செய்து சுகாதார ஆய்வாளர் அலுவலகமாக மாற்ற வேண்டும்” என அவர் தெரிவித்தார்.


அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு செய்ததாக 2018 ஆம் ஆண்டில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் புகார் அளித்தனர். இதன் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.