கோவை மாவட்டத்தில் உள்ள 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கூட்டாக, மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர். அதில் கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மத்திய மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டப்பணிகளை ரத்து செய்யக்கூடாது, தொகுதிகளில் அரசு பணி துவக்க நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி  மனு அளித்தனர். அப்போது ஆட்சியர் சமீரன் தனது இருக்கையில் அமர்ந்தவாறு மனுவை பெற்றதற்கு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 




அப்போது "எம்.எல்.ஏ. வந்தா, எழுந்திருச்சு வாங்க மாட்டீங்களா?" என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். " எதற்கு எழுந்து நிற்க வேண்டும்?" என ஆட்சியர் சமீரன் கேட்க,  "இது ரொம்ப தவறு சார். நான் 25 வருசத்துக்கு மேல பொது வாழ்க்கையில் உள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து மனு கொடுக்கும் போது இப்படி அமர்ந்தவாறு  வாங்குவீர்களா? என்ன பழக்கம் இது? இது என்ன புது பழக்கமாக உள்ளது?" என முன்னாள் துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் கடிந்து கொண்டார். மேட்டுபாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் ஆகியோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆட்சியர் சமீரன் உடனடியாக எழுந்து நின்று மனுவை பெற்றுக் கொண்டார். இதனால் மாவட்ட ஆட்சியரின் அறையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சியரை அதட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 




இதனைத் தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களை அதிகரித்து கூடுதலாக பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த வேண்டும். சரியான முறையில் டோக்கன் வழங்கி, பொது மக்களை காக்க வைக்காமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். கோவை மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் துவக்கப்பட்ட பணிகளை விரைந்து  முடிக்க வேண்டும். அனைத்து நீர் நிலைகளிலும் அதிகப்படியான நீரை சேமிக்க வேண்டும். 


பல்வேறு நேரங்களில் அரசு நிகழ்ச்சிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தவிர்த்து விட்டு, எந்த பதவியிலும் இல்லாத ஆளும்கட்சி நபர்களை உடன் வைத்துக் கொண்டு பூமி பூஜை, கட்டிடம் திறப்பு உள்ளிட்ட அரசு நிகழ்வுகளை நடத்துவது தவிர்க்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். திமுக அரசால் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற ஐயம் தங்களுக்கும் மக்களுக்கும் உள்ளது. இதுபோல இனி நடக்க கூடாது" என அவர் தெரிவித்தார்.