கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற துணிகர கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாளையார் சோதனைச் சாவடி அருகே, தங்க நகை தொழிலாளியை காரில் கடத்திச் சென்று, அவரிடமிருந்த ரூ.41 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Continues below advertisement

தங்கம் விற்ற பணம் குறிவைப்பு

கேரள மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்த 56 வயதான லட்சுமணன் என்பவர், தங்கம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை, 200 கிராம் தங்கக் கட்டிகளை விற்ற லட்சுமணன், அதற்காக பெற்ற ரூ.41 லட்சம் பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் (KL 55 P 6376) ரகசிய அறையில் மறைத்து வைத்து, கேரளா நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளார்.

Continues below advertisement

காலை சுமார் 8.30 மணியளவில், கோவை–பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், கே.ஜி. சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாளையார் சோதனைச் சாவடியைக் கடந்த 200 மீட்டர் தொலைவில் லட்சுமணன் சென்றுகொண்டிருந்தபோது, சில்வர் கிரே நிற ஸ்விப்ட் கார் ஒன்று (KL 55 T 5506) அவரை பின்தொடர்ந்து வந்துள்ளது.

அந்த காரில் இருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென லட்சுமணனின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து கீழே தள்ளியுள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த லட்சுமணனை, அந்த கும்பல் பலவந்தமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றது. மேலும், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளனர்.

ரூ.41 லட்சம் பணம் கொள்ளை

பின்னர், கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகே மேனாம்பாறை பகுதியில் லட்சுமணனை காரிலிருந்து கீழே இறக்கிவிட்ட கொள்ளையர்கள், அவரது செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.41 லட்சம் பணத்தை அந்த கும்பல் கொள்ளையடித்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட லட்சுமணன், கே.ஜி. சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் எண்ணை அடிப்படையாகக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் மூலமாக மர்ம கும்பலை அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவம், அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.