கோவை: வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக துபாயில் சிக்கியிருந்த கோவையை சேர்ந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் இந்திய அரசின் உதவியுடன் பாதுகாப்பாக கோவை திரும்பினர்.

Continues below advertisement

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதாவது, சுற்றுலா நோக்கில் மூன்று குடும்பங்களை சேர்ந்த நாங்கள் துபாய் சென்றிருந்தோம். சுற்றுலாவை முடித்துவிட்டு கோவை திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு சென்ற போது, விமான நிலையத்தை சுற்றிய பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததாக தகவல் கிடைத்தது. இதன் காரணமாக விமான நிலையத்துக்குள் செல்ல முடியாமல், மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பச் செல்லப்பட்டது.

துபாயில் சிக்கிய கோவை மக்கள் சொன்ன அதிர்ச்சி

Continues below advertisement

இதனால் மூன்று நாட்கள் துபாயில் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நாட்களில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலையில் கிடைத்ததால் சிரமம் ஏற்பட்டது. பின்னர் நண்பர்கள் மூலம் இந்தியாவில் உள்ள தொடர்புகளை அணுகி, அவர்களின் உதவியுடன் வெளிநாட்டு இந்தியர்கள் (NRI) மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணம் மிகவும் கடினமாக இருந்ததாகவும் கூறினர். அபுதாபி விமான நிலையத்தில் இமிகிரேஷன் கடந்தவர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்பட்டதாகவும், மற்றவர்களுக்கு அவ்வாறு வசதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், அபுதாபி அரசு அனைவரையும் முழுமையாக கவனித்துக் கொண்டதாக சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முழுமையான உண்மை அல்ல என்றும், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களிலும் மிகைப்படுத்தல்கள் உள்ளன என்றும் அவர்கள் கூறினர்.

துபாயில் நிலவி வந்த பதற்றமான சூழ்நிலையின் வீடியோ காட்சிகளையும் அவர்கள் செய்தியாளர்களுக்கு காட்டி பகிர்ந்தனர்.