கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்நாட்டு பொருட்களை கொண்டு குறைந்த செலவில் வடிவமைக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் இரு இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குறிஞ்சிநகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் நரேஷ் குமார் (29) மற்றும் அனிஷ் மேத்யூ (29). இதில் அனிஷ் மேத்யூ நெதர்லாந்து நாட்டில் விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பை 2015-ஆம் ஆண்டில் முடித்துள்ளார் . நரேஷ் குமார் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மின்னணு பொறியியல் படிப்பினை படித்துள்ளார் . இந்திய காங்கிரஸ் மாணவர் படையில் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பில் அங்கம் வகிக்கும் இந்த இரு இளைஞர்கள், ஊரடங்கு நேரத்தில் பொது மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர்.


தமிழ் நாட்டில் தற்பொழுது கொரோனா இரண்டாம் ஆலை மிகவும் தீவிரம் அடைந்து , மூன்றாம் அலையாக மாறும் சூழ்நிலை நிலவி வருவதாலும், கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, வென்டிலேட்டர் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளதால், சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர் வருகின்ற காலகட்டத்தில், குறிப்பாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் புதியதாக நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாத அளவிற்கு நோயாளிகள் நிரம்பி வழிகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க  தமிழ் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் தோறும் கூடுதல் படுக்கைகளை தயார் செய்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க, ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது.


நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்ட அனிஷ் மற்றும் நரேஷ் , வெளிநாட்டிலிருந்து அதிக செலவில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை இறக்குமதி செய்வதை தவிர்க்க  குறைந்த செலவில் உள்நாட்டு பொருட்களை கொண்டு ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.



அதன்படி காற்றில் உள்ள 21 சதவீதம் ஆக்சிஜனை ஜியோ லைட் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தி கம்ப்ரசர் மூலம் தனியாக பிரித்து எடுத்து அதனை ஒரு குடுவையில் சேமித்து வைக்கும் தத்துவத்தைப் பயன்படுத்தி, உள்நாட்டு பொருட்களை கொண்டு 40,000 ரூபாயில் ஒரு நிமிடத்திற்கு 10 லிட்டர் என்ற வீதத்தில் ஆக்சிஜனை தயாரிக்கும் திறன் படைத்த ஆக்சிஜென் செறிவூட்டி இயந்திரத்தை தயாரித்துள்ளனர். ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு பேசிய அனிஷ் “இந்த கருவியின் வெளிநாட்டு இறக்குமதி மதிப்பு 1 முதல் 1.25 லட்சம் ஆகும். இதை நாங்கள் உள்நாட்டு உதிரிபாகங்களை கொண்டு எளிமையான முறையில் வடிவமைத்து உள்ளதால் ஒரு கருவியை 40,000 ரூபாயில் உற்பத்தி செய்ய முடியும் .



கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய, எங்களுடைய இந்த இயந்திரத்தை ஆய்வுக்கு உட்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ் அவர்களை நேரில் சந்தித்து ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரத்தின் செயல் முறையை விளக்கியுள்ளோம் . இதனைத் தொடர்ந்து இந்த கருவியினை  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவாதம் அளித்ததோடு,  எங்களின் இந்த முயற்சியை வெகுவாக பாராட்டினார். விரைவில் எங்களது கருவியை ஆய்வுக்கு உட்படுத்தி தமிழக அரசிடம் இருந்து எங்களது கருவியை ஒரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ உபகாரணமாக மாற்றுவதுற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் உடனடியாக எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் , ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் .



தற்போது இந்த கருவியை வடிவமைக்கும் உதிரிபாகங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் , அரசு இதில் உடனடியாக தலையிட்டு எங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை கிடைக்கும்படி செய்தால், நாள் ஒன்றுக்கு 10 கருவிகள் வரையிலும்  எங்களால் வெற்றிகரமாக வடிவமைக்க முடியும். இதனால் ஆக்சிஜென் பற்றாக்குறையால் நிகழும் மரணங்களையும் பெரும் அளவில் தவிர்க்கலாம்” என்று தெரிவித்தார் .