முதல் கணவரை உதறி, இரண்டாவது கணவராக அரசை ஏற்றுக் கொண்ட அன்னபூரணி. அரசு, இறந்த பின், அவர் நினைவாக சிலை வைத்து அன்னபூரணி வழிபட்டதாக அவரே கூறியிருந்தார். "இருவரும் எங்களுக்குள் சக்தி இருப்பதை உணர்ந்து தான் இணைந்தோம், அந்த சக்தி தான் எங்களை பயிற்றுவித்தது. எங்களுக்குள் செயல்பட்டது. பின், அரசு உடலை அந்த சக்தி எடுத்துக் கொண்டது. அவருக்குள் இருந்த சக்தி, என்னுள் இருந்த சக்திக்குள் ஒன்றிணைந்து, ஒரே சக்தியானது. பின் அந்த சக்தி, பலரை மகிழ்விக்க, அவர்கள் குழந்தையாய், நான் தாயாய் மாற வைத்தது" என அன்னபூரணி தெரிவித்திருந்தார். 




மூச்சுக்கு முன்னூறு முறை எதற்கெடுத்தாலும் ‛அரசு’ புகழ் பாடி வரும் அன்னபூரணி, செங்கல்பட்டு  மாவட்டம் தொண்டம நல்லூர், தாதன்குப்பன் பகுதியில் அரசு சிலை வைக்கப்பட்டு,அங்கு அன்னபூரணி வழிபாடு நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 28 தேதி அன்னபூரணி அரசு உலக பேமஸ் ஆகி கொண்டிருந்த நேரத்தில், அங்கு சென்றால், அரசு சிலை இருந்த இடம் தரிசாக இருந்தது. தரிசு நிலத்தில் ஒரே ஒரு சின்ன கட்டடம் இருந்தது. அங்கு தான் அரசு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அன்னபூரணியால் பூஜிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சரி நேரில் சென்று அந்த சிலையை பார்க்கலாம் என்று சென்றால், சிலை இருந்த பீடம் மட்டுமே இருந்தது. 




பாகுபலி லிங்கம் போல பெயர்த்து எடுக்கப்பட்ட, அன்னபூரணி அரசு அம்மாவின் சிலை தற்போது எங்கே இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 'ஆன்மிகக் அட்வைஸ்' கொடுப்பதற்காக அன்னபூரணி அரசு அம்மா 700 ரூபாய் கட்டணம் வாங்கி அட்வைஸ் கொடுத்து வரும் நிலையில், 'அன்னபூரணி அம்மாவின் எழுச்சிக்கு' காரணமாக இருந்த அரசின் சிலை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு சிற்பக் கூடத்தில் சிலைகளுடன் சிலையாக காட்சி அளிக்கிறது. அனுமன் சிலை அருகில், புத்தரின் அரவணைப்பில் அரசு தற்போது, மகாராஜா போல் மகாபலிபுரம் சுற்றுலா பயணிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு உள்ளார்.




அட நம்ம அன்னபூரணி அரசு சிலை ஏன் இந்த சிற்பக் கூடத்திற்கு வந்தது ஏன் என்று  கேட்டால், கொண்டுவந்து வச்சிருக்காங்க திருப்பி எடுத்துட்டு போயிடுவாங்கன்னு, ஒரே வரியில் பதில் சொன்னார்கள். எவ்வளவு நேரம் அவங்ககிட்ட பேசியும் வேற பதிலை வாங்க முடியல, ஆன்மீக அட்வைஸ் பெயரில் அன்னபூரணி அரசு பெயரைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில், பணம் சம்பாதித்து வருவதாக கூறப்படும் நிலையில், அரசின் சிலையை ஆதரவு இல்லாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.