வந்தே பாரத் Sleeper Coach அறிமுகம்


சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள இன்டெக்ரல் கோச் ஃபேக்டரி ( ICF ) இரயில்கள் இணைப்பு பெட்டிகள் தயாரிக்கும் தொழிற் சாலையில் வந்தே பாரத் ரயில் சேவையின் ஸ்லீப்பர் கோச் ( Sleeper Coach) பெட்டிகளின் அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. 


முதன் முறையாக வந்தே பாரத் ரயில்களின் ஸ்லீப்பர் கோச் ( Sleeper Coach) பெட்டிகள் இந்த ICF ரயில்வே இணைப்பு தொழிற்சாலைகளில்  தயாரிக்கப்பட்டுள்ளது. 


இந்த ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் ரயில்களில் மொத்தமாக 823 பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம். அனைத்தும் படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் கோச் பெட்டிகளாகதான் உள்ளது. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயிலில் முதல் ரக ஏசி பெட்டி ஒன்று உள்ளது. இதில் 24 பயணிகள் பயணம் மேற்கொள்ள முடியும் எனவும் இரண்டாம் ரக ஏசி பெட்டிகள் 4 உள்ளது. இதில் 188 பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம் எனவும் மூன்றாம் ரக ஏசி பெட்டிகள் 11 உள்ளது. இதில் 611 பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே இந்த வில்லிவாக்கம் ரயில்வே இணைப்பு பெட்டி தொழிற்சாலைகளில் (ICF)-ல் 77 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ளது. தற்போது முதல் முறையாக வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில் பெட்டிகளை இந்த ரயில்வே இணைப்பு தொழிற்சாலைகளில் ICF-ல் தயாரிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் முதல் முறை படுக்கை வசதி


இந்தியா முழுவதும் மொத்தமாக பஞ்சாப், உத்திர பிரேதசம், தமிழ்நாடு என மூன்று மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவிலே முதன் முறையாக படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களானது இந்த வில்லிவாக்கம் ICF யில் தயாரிக்கப்பட்டுள்ளது. 


அடுத்த கட்ட சோதனைக்கு பிறகு இந்த ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்கள் அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


பல்வேறு சிறப்பம்சங்கள் உடன் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து பெட்டிகளிலும் தீ அணைப்பான் கருவி மற்றும் ஒவ்வொரு படுக்கைக்கு அருகே அவசர காலங்களில் ரயில்களை நிறுத்தும் பட்டன் உள்ளது. ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்வதற்கு தானியாங்கி கதவுகள் மற்றும் ஒவ்வொரு பெட்டிக்கும் Emergency Talk Back Unit என்ற கருவி உள்ளது.


இதன் மூலம் முன்பகுதியில் உள்ள லோகோ பைலட் இடம் பேச முடியும் அதற்கு அவர்கள் பதில் அளிக்க கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் லோகோ பைலட் அறையில் ரயில்களில் உள்ள சிசிவிடி காட்சிகள் ஓடி கொண்டு இருக்கும். ஒவ்வொரு பெட்டிகளிலும் சிசிவிடி கேமிராக்கள், கழிவறை வசதிகள், ஒவ்வொரு படுக்கைக்கு அருகே சார்ஜிங் கேபிள் மற்றும் சிறிய லைட் உள்ளது. 


அதே போல இந்த ரயில்களில் உள்ள கதவுகள் அனைத்தும் தானியாங்கி மூலமாக செயல்படக்கூடியது. இந்த ரயிலானது 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டது. 


பின்னர் சென்னை வில்லிவாக்கம் ICF ரயில்வே இணைப்பு பெட்டி தொழிற்சாலையின் பொது மேலாளர் உ.சுப்பா ராவ் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்களின் சிறப்புகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்;


பகல் நேரம் அல்லாமல் இரவு நேரத்தில் நீண்ட தூரம் பயணிக்ககூடியவர்களுக்காக இந்த ஸ்லீப்பர் கோச் ரயில் உருவாக்கப்பட்டது என தெரிவித்தார். நவம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு ஆரம்ப கட்டப் சோதனை ஓட்டம் முடிவடையும், அதன் பிறகு மேற்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வேயில் சோதனை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.


அடுத்த வருடம் ஜனவரி 15 ஆம் தேதி முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் அனுமதி பெரும் எனவும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார்.


ரயில் பெட்டிகள் ஒன்றன் பின் ஒன்றோடு மோதினால் பெரும் விபத்து தவிர்க்கும் விதத்தில் பாதுகாப்பு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 50 ரயில் ரேக்குகள் ஐசிஎப்-ல் தயார் செய்யப்பட உள்ளன என கூறினார்.


அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும் இருப்பது போல கவாச் சிஸ்டம் இதிலும் உள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் 16 கார் வகை 120 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அனைத்து சவால்களும் கண்டறியப்பட்டு, லக்னோவில் சோதனை செய்யப்பட்டுள்ளது.  இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் வடிவமைப்பை உருவாக்க 1 வருடம் தேவைப்பட்டது என தெரிவித்தார்.