சென்னை பைக் திருடன் மர்மம் : மனநல காப்பகத்தில் இருந்து தப்பித்தவரா ? போலீசார் கொடுத்த அதிர்ச்சி தகவல்
சென்னை ஆதம்பாக்கம் ஆபீசர் காலனியைச் சேர்ந்தவர் மாதேஷ் ( வயது 26 ) இவர் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் பிருந்தாவன் நகர் பிரதான சாலையில் காய்கறி வாங்க சென்றுள்ளார்..அப்போது, அவரை வழி மறித்த நபர் மாதேஷை மிரட்டி ஸ்கூட்டரை பறித்து சென்றார். இது குறித்த புகாரின்படி ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை துவக்கினர்.
அடுத்த சில மணி நேரங்களில் ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி என, சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக புகார்கள் வந்தன. பதறியடித்த போலீசார், வாகனங்கள் திருட்டு போன இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் கைவரிசை காட்டியது தெரியவந்தது. அவர் ஒரு இடத்தில் இருந்து திருடிய இருசக்கர வாகனத்தை மற்றொரு இடத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து மற்றொரு வாகனத்தை திருடி செல்வதையும் தொடர்ந்து செய்துள்ளார். அந்த வகையில், கடைசியாக திருடிய வாகனத்தை, வேளச்சேரி ரயில் நிலையத்தில் விட்டு, மேம்பால ரயிலில் ஏறி செல்வது தெரிய வந்தது.
புகைப்படத்தை வைத்து, போலீசாரும் அவரை பின் தொடர்ந்தனர். இதில், மெரினாவில் சுற்றித் திரிவது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, முன்னுக்கு பின் முரணாக உளறினார். அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன். எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய போது, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அர்மேந்தர் என்பர் பேசியுள்ளார்.
பிடிபட்டது தன் சகோதரர் பாவேந்தர் ( வயது 30 ) என்றும், கிருஷ்ணகிரி மாவட்டம், சேட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் போலீசாரிடம் கூறினார். குடிப்பழக்கத்தால் மனநலம் பாதிக்கப்பட்ட பாவேந்தர், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மூன்று நாட்களுக்கு முன் அங்கிருந்து மாயமானதும் தெரிய வந்தது. இதையடுத்து அர்மேந்தரை சென்னைக்கு வரவழைத்த போலீசார், அவரிடம் பாவேந்தரை ஒப்படைத்தனர்.
வீட்டிற்கு வீடு மொட்டை மாடியில் தாவி ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால், நள்ளிரவில் பரபரப்பு.
சென்னை குமரன் நகர் கோதண்டராமன் கோவில் தெருவில் உள்ள மொட்டை வீட்டின் மாடியில் நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இருந்தது. அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் மது போதையில் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. திடீரென அங்கிருந்து பக்கத்து வீட்டு மாடியில் குதித்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரவே அங்கிருந்து மற்றொரு வீடு என தாவித் தாவி சென்றுள்ளார். பின், அதே தெருவில் உள்ள வீட்டின் முதல் மாடியில் இருந்து சாலையில் குதிக்க முயன்றுள்ளார். அப்போது வீட்டின் நுழைவாயில் கேட்டின் கூர்மையான கம்பி அவரது வலது கை மணிக்கட்டில் குத்தியது. இதனால், அங்கிருந்து தப்ப முடியவில்லை. இதையடுத்து பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு அரசு வந்த குமரன் நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், இரும்பு கம்பியை வெட்டி அந்த நபரை மீட்டனர். பின் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில், கே.கே.நகரை சேர்ந்த சேகர் ( வயது 38 ) என, தெரிய வந்தது. திருட்டில் ஈடுபட முயன்றாரா அல்லது மது போதையில் ரகளையில் ஈடுபட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.