டிடிஎஃப் வாசன்  (TTF VASAN )
 


இருசக்கர வாகனத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்வது, உயர்ரக பைக்குகளில் சாகசங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட வீடியோக்களை யூடியூபில் பதிவு செய்து வருவது டிடிஎஃப் வாசனின் வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில், டிடிஎஃப் வாசன் கடந்த 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் உயர்ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். கை முறிவு காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு சென்ற நிலையில் பாலுசெட்டி சத்திரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாசன் திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டில் தலைமறைவாக இருந்து வந்தார். இதனை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை விடியற்காலை டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வாசன் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1இல் ஆஜர் செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறைக்கு சென்ற வாசன் உடல்நிலை சரியில்லாததால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


புழல் சிறையில் 


பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 19ஆம் தேதி காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு ,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அக்டோபர் மூன்றாம் தேதி வரை அவரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில்,  நேற்று முன்தினம் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம்,  டிடிஎஃப் வாசன்   ஆஜர் படுத்தப்பட்டார்.  வழக்கை விசாரித்த நீதிபதி இனியா கருணாகரன் மீண்டும்  15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.


காஞ்சிபுரம் நீதிமன்றம்


காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இதுவரை இரண்டு முறை ஜாமீன் மனு கேட்டு,  டிடிஎஃப் வாசன்  மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி  ஜாமீன் வழங்க முடியாது என இரண்டு முறை ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்திருந்தார்.  இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவரது ஜாமீன் மனு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது, மனுவை தாங்கள் திருப்பி பெற்றுக் கொள்வதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு அளித்திருப்பதாகவும் வாசன் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர். 


ஜாமீன் மனு தள்ளுபடி


சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த  ஜாமீன் மனுவானது  இன்று  நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. டிடிஎஃப்  வாசன் தரப்பு வழக்கறிஞர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டும், இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு லைசென்ஸ் வேண்டாம் என கூறியும்,   ஜாமீன் வழங்க கோரி வாதிட்டனர்.   காவல்துறை சார்பில்,  ஜாமீன் வழங்கக் கூடாது எனவும்,  இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும் எனவும் வாதிட்டனர். அவரைப் பின்பற்றி சிறுவர்களும் வாகனத்தை வேகமாக ஓட்டுகிறார்கள்.  பல லட்சம் மதிப்புள்ள உடைகளை அணிந்து இருந்ததால், அதிர்ஷ்டவசமாக  வாசன் உயிர் தப்பி உள்ளார். அவரை பின்பற்றும் சிறுவர்கள் அனைவரும் அதே போன்று உடைகளை அணிந்து வாகனத்தை ஓட்ட வாய்ப்பில்லை, அவரைப் பின்பற்றும், சிலர் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடுவதாக காவல்துறை  தகவல். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


மேலும்  நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்ததாவது : புழல் சிறையில் உள்ள டிடிஎஃப் வாசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அந்த பைக்கை எரித்து விட வேண்டும் என காட்டமான விமர்சனத்தை முன் வைத்தார் நீதிபதி கார்த்திகேயன்.