மூன்றாம் பாலினத்தவர்கள்

 

இயற்கையின் விதிப்படி ஆண் பெண் என்ற இனம் இருப்பதைப் போல, மூன்றாம் பாலினத்தவர்களும் இயற்கையின் விதிப்படி உருவாகின்றனர். பல நூற்றாண்டுகள் மேலாக அவர்களுக்கு அநீதிகள் இழக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாக அவர்களுக்கான அங்கீகாரத்தை அரசு கொடுத்து வருகிறது. இருந்தும் பல இடங்களில் முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருநங்கைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பிலும், பல்வேறு திட்டங்கள் மூலம் உதவி செய்து வருகின்றனர்.இந்தநிலையில் திருநங்கைகள் மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அவர்களுக்கு வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளில் அவர்கள் மூன்றாம் பாலினத்தவர்களாகவே கருதப்பட்டு வருகின்றனர். 

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்

 

இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்ட நடராஜபுரம் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் ' மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், புக்கதுரை ஊராட்சியில் பணியாற்றி வந்துள்ளனர். இப்பகுதியில் இருக்கும் திருநங்கைகளின் முக்கிய வாழ்வுதாரமாக இந்த 100 நாள் வேலை திட்டம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இவர்களுக்கு எந்தவித பணியும் ஒதுக்காமல் இருந்து வந்துள்ளனர். தங்களுக்கு பணி ஒதுக்காதது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்த பொழுது பணி ஆணை வரவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

கோரிக்கை மனு

 

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சத்திய ஸ்ரீ ஷர்மிளா , அம்பிகா மற்றும் அப்பகுதியை சேர்ந்த திருநங்கைகள் கடந்த மாதம் 20ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பரிசீலனை செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மனு குறித்து தீர்வு எட்ட, உத்தரவிட்டார். 



Aadhaar authentication

 

இந்த மனு மீதான விசாரணை நடத்திய மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் , மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆதார் அடிப்படையிலேயே ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் மேற்கண்ட திருநகைகளின் ஆதார் அட்டையில் , அவர்களது பாலினம் திருநங்கை என உள்ளது. ஆனால் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் வலைதளத்தில் பாலினம் ஆண் மற்றும் பெண் என்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே உள்ளது. திருநங்கை என்ற பாலினம் இல்லாத காரணத்தினால் இவர்களது ஆதாரை இணையதளத்தில் சரி செய்ய இயலவில்லை. இதன் காரணமாக இவர்களது ஆதார் சரி பார்த்து வெற்றிகரமாக செய்து முடிக்க முடியாததால், இவர்களுக்கு பணி வழங்க முடியாத சூழல் உள்ளது எனவே இந்த விவரத்தை சரி செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட திட்ட இணை இயக்குனருக்கு வட்டார வளர்ச்சி துறை அலுவலர் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடித நகலையும் , திருநங்கைகளுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

 

 

இதுகுறித்து சுபஸ்ரீ சர்மிளா என்ற திருநங்கை தெரிவித்ததாவது: தங்களுக்கு நீதிமன்றம் மற்றும் இந்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், எங்களை அரசு இணையதளத்தில் அங்கீகரிக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். உடனடியாக இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் எங்களுடைய உரிமையையும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்