இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் வெளியாவதில் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தது. ரஜினியின் ’அண்ணாத்த’ திரைப்படத்திற்கு போட்டியாக தீபாவளி அன்று ‘மாநாடு’ படமும் வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், தவிர்க்க முடியாத காராணங்களால் நவம்பர் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் நேற்றி முன்தினம் இரவு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மீண்டும் தவிர்க்க முடியாத காரணங்களால் படம் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது என ட்வீட் போட்டதும் மீண்டும் பற்றிக்கொண்டது மாநாடு சர்ச்சை. படம் வெளியாகுமா ? வெளியாகாதா என்ற எதிர்பார்ப்பு எகிறி சிம்பு ரசிகர்களின் இதயங்களை பதம் பார்க்க தொடங்கிய நேரத்தில், படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று மீண்டும் நேற்று முன்தினம் இரவே அறிவிக்கப்பட்டது.

 



இதுமட்டுமின்றி, சில நாட்களுக்கு முன் மேடையில் பேசிய சிம்பு, கண்ணீர் விட்டு கதறி அழுதார். எனக்கு நிறைய பிரச்னை கொடுக்குறாங்க. என் பிரச்னைகளை நான் பாத்துக்குறன், என்ன மட்டும் நீங்க பாத்துக்குங்க என கைகுவித்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார். டி.ஆரும் அவரது மனைவியும் கூட கமிஷனர் அலுவலகம் படிகள் ஏறி வரை புகார் கொடுத்தனர்.

 



நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் வெளியாகுமா என பல்வேறு கேள்விகளுக்கு இடையே நேற்று காலை மாநாடு திரைப்படம் வெளியானது. இதனால் சிம்புவின் ரசிகர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் சென்னை ஆவடியில் உள்ள மீனாட்சி திரையரங்கில் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தை பார்க்க வந்த சிம்பு ரசிகர் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் பெண்களுக்கு தக்காளி பரிசளித்தனர். 



தக்காளி விலை வரலாறுகாணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு சிம்பு ரசிகர்கள் ஒரு கிலோ தக்காளி வழங்கியது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான ஏற்பாட்டை சிம்பு மதன் தலைமையில் ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகம் முழுவதும் தக்காளி விலை அதிகரித்துள்ள நிலையில், பல உணவகங்கள் மற்றும் சில கடைகளில் தங்களுடைய பொருட்களை வாங்கினால் தக்காளி இலவசம் என அறிவிப்பை வெளியிட்டு விளம்பரம் செய்துவரும் நிலையில் சிம்பு ரசிகர்கள் இவ்வாறு செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது.