தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க, காவல் துறையில் ஏற்கனவே மூன்று பிரிவுகள் உள்ள நிலையில், தீவிரவாத தடுப்பு  படையை உருவாக்க அவசியமில்லை என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 


 

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாகவும், ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சி காரணமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

 

இந்தியா மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக மனுவில் கூறியுள்ள அவர், இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழகத்திற்கும் இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். 

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும் கூட தீவிரவாத தாக்குதல் போன்ற நேரங்களில் அதனை எதிர்கொள்ள ஒரு சிறப்பு அமைப்பு தேவை என்பதால், மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் தீவிரவாத தடுப்பு பிரிவை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

மேலும் தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை  தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிடக்  கோரியுள்ளார்.

 

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாகவும், பயங்கரவாத தாக்குதல்கள் ஏதும் இல்லை என்றும் மனுவில் கூறியுள்ள நிலையில், பயங்கரவாத தடுப்புப்படை அமைக்க கோரி வழக்கு தொடர்ந்தது ஏன் என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

இதற்கு பதில் அளித்த மனுதாரர் ஜெகன்நாத், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயங்கரவாத தடுப்புக்கு என பிரத்தியேகமாக சிறப்பு படையை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.

 

 தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இலங்கையிலிருந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது மத்திய அரசு சம்பந்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.

 

மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கு தமிழக காவல்துறையில் ஏற்கனவே மூன்று பிரிவுகள் உள்ள நிலையில், புதிய பிரிவு அமைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டார்.

 

இதையடுத்து, இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டி காட்டிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.










மற்றொரு வழக்கு









 

கலப்புத் திருமணம்  புரிந்தவருக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் நான்கு வாரங்களில் பணிநியமனம் வழங்க தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





 

தாமதமாக சான்றிதழ்களை சமர்ப்பித்தார் என்பதற்காக பணி நியமனம் மறுக்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், திருப்பூரைச் சேர்ந்த கலப்பு மணம் புரிந்தவருக்கு, அந்த முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் நான்கு வாரங்களில் பணிநியமனம் வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


 

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித் துறை 2015ம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

இந்த தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், நேரடியாகவும் பங்கேற்ற திருப்பூரைச் சேர்ந்த இளங்கோ என்பவர், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்தார். தேர்வில் 115 மதிப்பெண்கள் பெற்ற போதும், எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் மற்றும் கலப்பு மணம் புரிந்து கொண்டவருக்கான சான்றுகளை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, பணிநியமனத்துக்கு அவர் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

 

பின்னர், அந்த சான்றிதழ்களை சமர்ப்பித்த அவர், ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ம் ஆண்டு  வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சான்றிதழ்களை தாமதமாக சமர்ப்பித்தார் என்பதற்காக வேலைவாய்ப்பு வழங்க மறுக்க முடியாது எனவும், மனுதாரரை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதால், மனுதாரரை ஆய்வக உதவியாளராக நியமித்து நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.