சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் சந்தித்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசியது ; 


தமிழக முதலமைச்சர் வெளிநாடு சென்று இருக்கிறார். சைக்கிள் ஓட்டுவதும் போஸ் கொடுப்பதுமாக இருக்கிறாரே தவிர  பெரிய அளவில் செயல் இல்லை. அந்நிய நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு முதலீடு வருகிறது என்றால் அது பிரதமர் வெளிநாடுகளுக்கு சென்று தேசத்தை பற்றி நல்ல எண்ணம் ஏற்படுத்தியதால் தான்.


தமிழக அரசு பி எம் ஸ்ரீ திட்டம் குறித்து  மத்திய அரசினால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்ற தவறான கருத்தை பதிவு செய்து வருகிறார்கள். பள்ளிக் கல்வித் துறைக்கு மத்திய அரசு என்ன நிதி கொடுக்க வேண்டுமோ அதற்கான 90 சதவீத நிதியை கொடுத்தாகி விட்டது.


பி.எம்.ஸ்ரீ திட்டத்தை  நடைமுறைப்படுத்துகிறோம் அதனால் மூன்றாவது நான்காவது பங்கை கொடுங்கள் என்று சொல்லி விட்டு அதற்கு பின்னர் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றால் என்ன அர்த்தம். எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதோ அந்த திட்டத்திற்கு தான் நிதியை பயன்படுத்த வேண்டும் அதை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறுவது திமுகவின் தவறு.


ஒரு திட்டம் மத்திய அரசிடம் இருந்து  வந்தால் அதை எடுத்துக் கொள்கிறீர்களா இல்லையா ? அதனை ஆராய  இவர்கள் எந்த குழுவும் அமைக்க முடியாது. மத்திய அரசு ஏற்கனவே கொடுத்த நிதியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கலாம். ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாது என கூறுவது திமுகவின் செயல் அற்ற திறன்.தனியார் பள்ளிகளில் இந்தி கற்று கொடுக்கப்படவில்லையா? அரசு பள்ளி மாணவர்களை மட்டுமே துன்பத்துக்கு உள்ளாக்கி வாய்ப்புகளை கெடுக்கிறார்கள்.


கார் ரேசிங் அவ்வளவு சீக்கிரமாக தொடங்க முடிகிறது. ஒரு புதிய கட்சி தொடங்கி மாநாடு நடத்துவதற்கு இடம் கேட்டால் கேள்வி கேட்கிறார்கள். 22ம் தேதி வா , 23ம் தேதி வா என அலையவிடுகிறார்கள். திமுகவிற்கு 2026-யை பார்த்து பயம் வந்து விட்டது. மாநாடு நடத்துவதில் இடம் கொடுப்பதில் என்ன பிரச்சனை.இந்த கருத்தை கூறுகிறேன் என்றால் விஜய்க்கு ஆதரவாக இருக்கிறேன் என்று இல்லை. விஜயின் கட்சியை தடுப்பது போல விஜயின் திரைக்காட்சியும் தடுக்கப்படுகிறது என கேள்வி பட்டேன்.


தம்பி விஜய்க்கு ஆதரவாக இருக்கிறேன் என்று இல்லை புதிய கட்சி வரும்போது வரவேற்க வேண்டும். வரட்டுமே களத்தில் எல்லாரும் நிற்போம் யாருக்கு மக்கள் ஆதரவு தருகிறார்களோ தரட்டும். நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.


கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழ்நாட்டில் தேவையே இல்லை என கூற முடியாது. எல்லாத் துறைகளிலும்  இருக்கிறது திரைத்துறையில் அதிகமாக இருக்கிறது. தமிழ் துறையில் சில பாடகிகள் நடிகைகள் பிரச்சனை இருக்கிறது என கூறி மாய்ந்து போனார்கள்.


கேரளாவை போன்று தமிழகத் திரைத் துறையிலும் பிரச்சினை இருக்கும் என்றால் அதற்கும் தீர்வு காண வேண்டும்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் போலீஸ் அதிகாரி பிரச்சனையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கிறார் என்றால் காவல்துறையை பாதுகாப்பற்றும் தமிழகத்தில் இருக்கிறது என்றால் யாருக்குத்தான் பாதுகாப்பு இருக்கும் என்பது கேள்விக் குறியாக இருக்கிறது. அமைச்சர்கள் எல்லாம் உதயநிதி உதயநிதி என கூறுகிறார்கள். அமைச்சர் துரை முருகன் இதுதான் நேரம் என்று வெளிநாடு பயணம் சென்று விட்டார்.


நேற்று கர்நாடக முதல்வர் நிகழ்ச்சியில் மேயர் கைகட்டிக்கொண்டு பவ்யமாக இருக்கிறார். இன்றைக்கு வாய் மூடிய அரசு தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக மோசமான நிலையில் அரசு இருந்து கொண்டிருக்கிறது.


தங்களது தன்மானத்தை தன்னுரிமையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம் எனக் கூறும் திமுக அரசு தன்னுடைய தன்மானத்தை தன்னுரிமையை மற்ற மாநிலத்திற்கு விட்டுக் கொடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.