பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மறைமலைநகர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்


கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் ஜேக்கப் (27) . இவர் பிரபல புகைப்படக் கலைஞர். ஆனால் சென்னையில் தங்கியிருந்த ஸ்டாலின் ஜேக்கப் க்ளவுட் கிட்சன் நடத்தி வந்தார். What a Karwad என்ற ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். சமூக வலைதளத்தில் மிகப் பிரபலமான ஸ்டாலின் ஜேக்கப்பின் பல்வேறு புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. மறைந்த முதல்வர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் இவர் எடுத்த புகைப்படங்கள் பலவும் நெகிழ்வை ஏற்படுத்தியது.



ஸ்டாலின் ஜேக்கப் தொடர்ந்து பல்வேறு புகைப்படங்கள் மூலம் சமூக வலைதளத்தில் பிரபலமாக இருந்து வந்தார். இதுபோக தனது கிளவுட் கிட்சன் தொழிலையும் செய்து வந்தார். அவ்வப்பொழுது ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்காக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பயணிப்பது வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார்.


இந்த நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது நண்பரான சென்னை அம்பத்தூர் பகுதி சேர்ந்த விஷ்ணு, என்பருடன் அரசு நிகழ்ச்சி ஒன்றை ஒளிப்பதிவு செய்துவிட்டு,  திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தபொழுது , பின்னால் வந்த கனரக வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடினர். அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில்  108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்து இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


முன்னதாக உயிரிழந்த ஸ்டாலின் ஜேக்கப் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். திமுகவின் சமூக வலைதள பணியை மிக துடிப்புடம் செய்து வந்த அவர், மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து பெற்றார். பிரபல புகைப்பட கலைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு செய்துள்ள பதிவில், “நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப் இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் & உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்” என பதிவு செய்துள்ளார்.


கனிமொழி எம்.பி அவர்களின் இரங்கல் செய்தியில், நேற்று பார்த்த அவரது சிரிப்பு மறையும் முன்னரே இவ்வளவு துக்க செய்தி என குறிப்பிட்டுள்ளார்