பணி மாறுதல் சிபாரிசுக்கு வீட்டுக்கு வந்தால் இனிமேல் இது தான் நடக்கும் - அமைச்சர் எச்சரிக்கை
மருத்துவ துறையில் பணி மாறுதல் குறித்து , சிபாரிசுக்கு வீட்டுக்கு வந்தால் 17A சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எச்சரிக்கை

பதவி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்ச்சி
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு
405 பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் 117 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கான பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ;
இந்தியாவில் 36 மாநில அரசு இருந்தாலும் தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பு என்பது மிக பிரம்மாண்டமானது, 2236 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்,
8713 துணை சுகாதார நிலையம் , 642 புதிய துணை சுகாதார நிலையம் ,708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், 476 நடமாடும் மருத்துவமனை என மிகப் பெரியது.
தமிழ்நாட்டில் அடித்தட்ட மக்களுக்கு தேவையான நோய் பாதிப்புகளை உடனடியாக சரி செய்து சுகாதாரத் துறையை மேம்படுத்துவது என தொடர்ந்து அள்ளும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்க கூடிய துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை.
இந்த துறை துவங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகி இப்பொழுது 103 ஆண்டுகளில் கொண்டாடியிருந்தாலும் தமிழ்நாட்டில் நடைபெற்ற பேரிடர்கள் வெள்ளம் , கொரோனா தொற்று போன்ற நேரங்களில் அதை சமாளித்தது பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை ஆகும்.
கொரோனா பல்வேறு உருமாற்றங்கள் ஏற்பட்ட போது அதை சமாளித்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் செய்த சேவைகள் யாரும் மாறாக முடியாது. அதே போன்று தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற உடனே நம்மளுடைய முதலமைச்சர் முயற்சியில் 100 கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு செலுத்தி கொரோனா தடுப்பூசி இலவசமாக தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசமாக தந்தார்.
கொரோனா தடுப்பூசி என்பது ஒட்டு மொத்தமாகவே மக்களுக்கு இலவசமாக தர வேண்டியது ஒன்று , ஆனால் தமிழ்நாட்டில் இலவசமாக தந்த பிறகு தான் மற்ற மாநிலங்களிலும் இலவசமாக தடுப்பூசியை தருவதற்காக ஒரு முன்னெடுப்பாக இருந்தது.
ஒட்டு மொத்தமாக இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கியதில் தமிழ்நாட்டில் ஒரு பங்கு அதில் உங்களுக்கும் ஒரு பங்கு உள்ளது.
சிபாரிசுக்கு வீட்டுக்கு வந்தால் நடவடிக்கை
1479 சுகாதார செவிலியர்கள் பணிகளுக்காக தேர்வுகள் நடைபெற உள்ளது. முதலமைச்சர் தலைமையில் வரும் ஜனவரி மாதம் நேரு விளையாட்டு அரங்கில் பணி நியமனம் வழங்கப்படும். இந்த துறைகளில் இதுவரை 50 மேற்பட்ட இடைத் தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிபாரிசுக்கு வீட்டுக்கு வந்தால் 17A சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ;
தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலோடு கிராம சுகாதார செவிலியர்களாக பணியாற்றி வந்த 405 சகோதரிகளுக்கு பதவி உயர்வு கொடுத்து பகுதி சுகாதார செவிலியர்கள் என்று பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, கர்ப்பிணி பெண்களை பதிவு செய்வது, ஊட்டச்சத்து மருந்து வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். இந்த அரசு பொறுப்பேற்ற பின் இது போன்ற பதவி உயர்வுகளை தந்து கொண்டுள்ளது.
வெளிப்படை தன்மையோடு பணி நியமன ஆணைகளும் , பணி மாறுதல் ஆணைகளும் , பதவி உயர்வு ஆணைகளும் , புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதும் என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் 35,702 புதிய பணி நியமன ஆணைகள் இந்த அரசு பொறுப்பேற்ற பின் இந்த துறை வரலாற்றில் இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 43,375 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 16,610 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். 17,780 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 1,12,947 பேர் இந்த துறையில் பயன் பெற்றுள்ளார்கள்.
ஆளுநர் ஏன் வெறுக்கிறார் என்று தெரியவில்லை
தமிழ்நாட்டில் சித்த மருத்து பல்கலைக் கழகம் வேண்டும் என இந்த அரசு பொறுப்பேற்ற பின் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக முதலமைச்சர் ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். ஆளுநர் கிடப்பில் வைத்து நீண்டகால போராட்டத்திற்குப் பிறகு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானம் தமிழ்நாட்டிற்கு உயர்கல்வித்துறை ஆயுஸ் அமைச்சகம் போன்ற பல்வேறு துறைகளுக்கு பல கேள்விகள் கேட்டு உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது. அதற்கு சட்ட வல்லுநர்கள் மூலம் பதில் அனுப்பி வந்தோம்.
அக்டோபர் 15 ஆம் தேதி இரண்டாம் முறை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது வரை தன்னிடத்தில் வைத்துக் கொண்டிருந்து ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் சித்த மருத்துவமனை அமைய ஆளுநர் உறுதுணையாக இருப்பார் என்று நம்புகிறோம்.
தமிழர் விரும்பி நேசித்த பாரம்பரிய வைத்திய முறையில் ஒன்று சித்த மருத்துவம். தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவ முறையை ஆளுநர் ஏன் வெறுக்கிறார் என்று தெரியவில்லை ஏன் பிடிக்கவில்லை என்ற காரணமும் தெரியவில்லை. இது உண்மையிலேயே ஒட்டுமொத்த தமிழர்களும் மிகப் பெரிய அளவில் வருத்தப்படும் நிகழ்வு.
ஊழலின் ஊற்றுக் கண்ணாக திமுக செயல் படுகிறது என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தது தொடர்பான கேள்விக்கு ;
பேசுவது என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் கடந்த காலங்களில் இந்த துறையில் நடந்த விஷயங்களையும் இப்போது நடக்கும் விஷயங்களையும் பொதுவான ஆட்களை வைத்து ஆராயலாம் அல்லது அவர்களை வந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம் என கூறினார்.
2026 தேர்தலில் திமுக அகற்றப்படும் என அமித்ஷா பேசியது தொடர்பான கேள்விக்கு ;
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தொகுதி வாரியாக 234 தொகுதிகளில் 221 தொகுதிகளில் கூடுதலாக திமுக வாக்கு பெற்று இருக்கிறது. அமித்ஷா போன்றவர்கள் காத்திருக்கலாம் 2026 தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.





















