சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அவர் மீது 354 ஏ (பாலியல் தொல்லை), தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் மீது அசோக் நகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, ராஜகோபாலனை ஜூன் 8ஆம் தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 பேர் பாலியல் புகார் கூறியுள்ளனர். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் இயக்குனர் ஷீலா ராஜேந்திரன் ஆகிய இருவரிடம் அசோக் நகர் மகளிர் போலீசார் கடந்த இரண்டு நாட்களாக சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.


இந்த நிலையில், இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக இருவரும் மாவட்ட குழந்தைகள் நல குழு முன்பாக இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.


முன்னதாக, இந்தப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வணிகவியல் பாடம் எடுக்கும் ஆசிரியராக பணிபுரியும், ராஜகோபாலன் மீது பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் ஒன்றை பதிவிட்டிருந்தார்.




அந்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பியதும், மாணவிகளுடனான ஆன்லைன் வகுப்பின்போது அரை நிர்வாணத்தில் மாணவிகளுக்கு அவர் பாடம் எடுத்ததையும் ஆதாரத்துடன் அவர் பகிர்ந்திருந்தார். மேலும், அவர் மாணவிகளை இரவில் வீடியோ கால் செய்ய சொல்லி வற்புறுத்துவதும், திரைப்படங்களுக்கு செல்ல அழைப்பதும் என்று மாணவிகளுக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்துள்ளது. முன்னாள் மாணவியின் இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த புகார் தொடர்பாக உடனே விசாரிக்க வேண்டும் என்றும், ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரு பாலியல் புகார்கள்!


இதன்பின்னர், கைது செய்யப்பட்ட ராஜகோபாலனிடம் நடத்திய விசாரணையில் அவர் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தொடர்ந்து இதுபோன்று ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவதும், அவர்களுக்கு ஆபாச படங்களின் இணைப்புகளை வகுப்பு குழுவிலே பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகோபால் இந்த பள்ளியில் தன்னைப் போன்றே மேலும் சில ஆசிரியர்கள் உள்ளதாகவும். அவர்களும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.